தோ பாயோ லோரோங் 6, தோ பாயோ ஈஸ்ட் சாலைகளின் சந்திப்பில் கடந்த புதன்கிழமை காலை 10.45 மணியளவில், பொருள்களை டிராலியில் வைத்து தள்ளிக்கொண்டு சென்ற 52 வயது ஆடவர் ஒருவர் பேருந்து விபத்தில் சிக்கி, பேருந்தின் கீழ் முன்புறத்தில் விழுந்தார்.
அந்தச் சமயத்தில் பேருந்து வலதுபுறத்தில் திரும்பிக்கொண்டிருந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் மீட்கும் வரை, சுமார் 15 நிமிடங்களுக்கு அவர் பேருந்தின் கீழ் விழுந்து கிடந்தார்.
மீட்கப்பட்ட அவர், டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அபாயகரமாக வாகனம் ஓட்டியதற்காக 36 வயது பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பேருந்தின் கீழிருந்து மீட்கப்பட்ட அவரது கைகள், பாதங்களில் கடுமையான காயம் இருந்ததுபோல தெரிந்ததாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் குறிப்பிட்டனர்.
பேருந்தின் முன்பகுதி சேதமடைந்திருந்ததாகக் கூறப்பட்டது.
விபத்தில் சிக்கிய ஆடவருடன் தொடர்புகொள்ள முயற்சி செய்து வருவதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவன தொடர்புகள் மூத்த துணைத் தலைவர் டாம்மி டான் குறிப்பிட்டார்.