கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத வகையில், ஆகப் பெரிய அளவாக 14.1 கிலோ ஹெராயின் போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கைப்பற்றி இருக்கிறது.
இந்த நடவடிக்கையின்போது, குறிப்பிடத்தக்க அளவில் மற்ற போதைப்பொருள்களும் சிக்கின.
கடந்த புதன்கிழமை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனைகளில் 2.8 கிலோ 'ஐஸ்', 7.5 கிலோ கஞ்சா, 323 கிராம் 'எக்ஸ்டசி' துண்டுகள், 28 'எக்ஸ்டசி' மாத்திரைகள், 1,008 எரிமின்-5 மாத்திரைகள், $12,629 ரொக்கம் முதலியவை கைப்பற்றப்பட்டன.
இவற்றின் மொத்த மதிப்பு $2 மில்லியனாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் பேரில் 29 முதல் 55 வயதுக்குட்பட்ட ஆடவர் மூவரும் பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
சிக்லப் சாலையில் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த புதன்கிழமை பிற்பகலில் ஒரு வாகனத்தை இடைமறித்து, 55 மற்றும் 50 வயதுடைய ஆடவர் இருவரையும் 52 வயதான பெண் ஒருவரையும் கைது செய்தனர். அம்மூவரும் சிங்கப்பூரர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
அவ்வாகனத்தைச் சோதனையிட்டபோது, மூன்று கட்டுகளில் கிட்டத்தட்ட 1,453 கிராம் ஹெராயின் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அத்துடன், அந்த 50 வயது ஆடவரிடம் மூன்று கிராம் ஹெராயினும் இரண்டு கிராம் 'ஐஸ்' போதைப்பொருளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.
பின் அந்தப் பெண்ணை சிக்லப் சாலையில் அவர் மறைந்து இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்று சோதனையிட்ட அதிகாரிகள், அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 11 கிராம் ஹெராயின், இரண்டு கிராம் 'ஐஸ்', ஒரு 'எக்ஸ்டசி' மாத்திரை, ஒரு எரிமின்-5 மாத்திரை ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
அதே நாளில் இடம்பெற்ற மற்றோரு நடவடிக்கையில், போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் இன்னோர் அதிகாரிகள் குழு, பிடோக் ரெசர்வோர் சாலைக்கு அருகே உள்ள ஒரு வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்கில் இருந்து 35 வயது ஆடவர் ஒருவரின் நடமாட்டத்தைச் சிறிது நேரம் கண்காணித்த பிறகு, அவரைக் கைது செய்தது.
ஏறத்தாழ 2,782 கிராம் ஹெராயின் அடங்கிய ஆறு கட்டுகள், 127 கிராம் 'ஐஸ்', ஐந்து பொட்டலங்களில் இருந்த 323 கிராம் 'எக்ஸ்டசி' துண்டுகள், $629 ரொக்கம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அதே புளோக்கில் இருந்த அவரது வீட்டைச் சோதனை செய்த அதிகாரிகள், அங்கிருந்த 8.96 கிராம் ஹெராயின், 1.95 கிராம் 'ஐஸ்', 2.5 கிலோ கஞ்சா, 1,007 எரிமின்-5 மாத்திரிரகள், ஏழு 'எக்ஸ்டசி' மாத்திரைகள், $12,000 ரொக்கம் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
அவ்வீட்டில் இருந்த 29 வயது பெண் கைது செய்யப்பட்டார். அவர் நிரந்தரவாசத் தகுதி பெற்றவர் எனச் சொல்லப்பட்டது.
பின்னர் அந்த 35 வயது ஆடவரை அவரது வாகனத்திற்கு அழைத்துச் சென்று சோதனையிட்ட போது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 944 கிராம் ஹெராயின், 763 கிராம் 'ஐஸ்', 5.05 கிலோ கஞ்சா ஆகிய போதைப்பொருள்களும் பிடிபட்டன.
இச்சம்பவங்கள் குறித்த விசாரணை தொடர்வதாக போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.
எவரேனும் 15 கிராமுக்கு மேல் தூய ஹெராயின் வைத்திருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டால், போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின்படி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

