சிங்கப்பூரில் பணிபுரியும் ஒன்றுவிட்ட சகோதரர்கள் 25 வயது கணேஷ் குமார் அருணாசலன், 26 வயது பாரதிதாசன் மூர்த்தி இருவராலும் தீபாவளி கொண்டாட தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியவில்லை.
கிருமிப் பரவலால் ஏற்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாடுகள், வேலை இழப்புகள், வருமானக் குறைவு, பெற்றோரையும் நண்பர்களையும் உறவினர்களையும் பார்க்க முடியாத நிலை என்று பல கவலைகளுக்கிடையே தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடிவதற்கு இங்குள்ளோரின் அன்புதான் காரணம் என்றனர் இந்த சகோதரர்கள்.
மலேசியாவில் மார்ச் மாதம் 18ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாடு அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து பல மாதங்களாக தங்களால் பயணம் செய்ய முடியவில்லை என்றார் கடந்த ஓராண்டாக இங்கு பொறியாளராகப் பணியாற்றும் திரு கணேஷ்.
"முன்னர் மாதத்திற்கு இருமுறையாவது என் குடும்பத்தைக் காணச் செல்வேன்," என்று கூறினார் நெகரி செம்பிலானின் சிரம்பான் மாவட்டத்தைச் சேர்ந்த திரு கணேஷ். அவரது பெற்றாரும் சகோதரியும் அங்குதான் வசிக்கின்றனர்.
குடும்பத்தின் நிதிநிலைமைக்குப் பொறுப்பேற்றுள்ள திரு கணேஷ், கொவிட்-19 கிருமிப்பரவலின் காரணமாக, மலேசியாவிலுள்ள மல்லிகைத் தோட்டம் ஒன்றில் பணிபுரியும் தம் தந்தை வேலையை இழந்துவிட்டதாகக் கூறினார். அவரது தாயார் வேலையிலிருந்து ஓய்வுபெற்று விட்டார்.
குடும்பத்தைப் பராமரிக்க தமது சேமிப்புப் பணம் கரைந்து நிதிநெருக்கடியை எதிர்நோக்கிய திரு கணேஷுக்கு சிங்கப்பூரிலுள்ள நண்பர்களின் அரவணைப்பு தைரியத்தைக் கொடுத்தது. தைரிய வார்த்தைகளால் ஊக்கப்படுத்தியதுடன், அவருக்கு நிதியுதவியும் செய்தனர். "அவர்கள் தந்த தைரியமும் ஆதரவும்தான் என்னை இன்று நிம்மதியாக வைத்திருக்கிறது," என்றார் அவர்.
இவ்வாண்டின் தொடக்கத்தில் தந்தையை இழந்த பேருந்து ஓட்டுநரான பாரதிதாசனுக்கு தீபாவளிக்கு ஜோகூர் பாருவில் வசிக்கும் தமது குடும்பத்தினரைக் காணச் செல்லமுடியாத வருத்தம் இருந்தாலும் பயணிகளின் மகிழ்ச்சியான முகங்களில் தாம் உற்சாகம் அடைவதாகக் கூறினார்.
அடுத்தாண்டு தமது தந்தையின் ஓர் ஆண்டு நினைவுநாளுக்குள் ஊருக்குச் செல்லத் திட்டமிட்டிருக்கும் திரு பாரதிதாசன், இங்கு தங்குவதால் செலவும் அதிகரித்துவிட்டதாகக் கூறினார்.
"ஆயினும், இங்குள்ள சிங்கப்பூர் நண்பர்கள் இந்தக் காலகட்டத்தில் எனக்கு பக்க பலமாக உள்ளனர்," என்றார் கடந்த எட்டு ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணிபுரியும் பாரதிதாசன்.
பணச்செலவைக் காட்டிலும் குடும்பத்தினரை விட்டுப் பிரிந்து தனிமையால் பாதிக்கப்பட்டதாகக் கூறும் இவருக்கு காதலியும் நண்பர்களும் உற்சாகமூட்டியதாகக் கூறினார்.
நண்பர்களும் உடன் பணிபுரிபவர்களும் மக்களும் எங்களைப் போன்றவர்கள் மீது அக்கறையோடும் அன்போடும் இருக்கின்றனர். முகம் தெரியாத பலரது அன்பான வாழ்த்துகளும், அக்கறையும் தங்களுக்கு உற்சாகம் ஊட்டுவதாக இருவரும் தெரிவித்தனர்.

