இர்ஷாத் முஹம்மது
இவ்வாண்டின் தீபாவளிக் கொண்டாட்டம் பிரகாசமானதாக இருக்கட்டும் என்று வாழ்த்தும் வண்ணம் சிங்கப்பூர் அரசாங்கம் சுவாரசியமான காணொளி ஒன்றைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.
காணொளியில் 'பிரகாசம் பக்கிரிசாமி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள உள்ளூர் பிரபலம் திரு ச.வடிவழகன், அரசாங்கத் திட்டங்களைப் பற்றி நகைச்சுவையான பாணியில் விளக்கியுள்ளார்.
அரசாங்கத்தின் gov.sg 'யூடியூப்', ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மூன்றரை நிமிடக் காணொளியைக் கிட்டத்தட்ட 99,000 பேர் பார்வையிட்டுள்ளனர். ஏறத்தாழ 4,000 பேர் அந்தக் காணொளியை ஃபேஸ்புக் பக்கம் மூலம் பகிர்ந்தும் உள்ளனர்.
"அனைவரிடத்திலும் ஒளி இருக்கிறது. அதை நாம் வெளிக்கொண்டுவரவேண்டும். மற்றவர்களுக்கும் ஒளியாக இருக்க வேண்டும் என்பதை இக்காணொளி மூலம் கூற வருகிறோம்," என்று கூறினார் திரு வடி.
"ஆண்டுதோறும் மற்ற தீபாவளி வாழ்த்து காணொளிகளை நாம் காண்கிறோம். அவற்றைப் போன்று தன்னம்பிக்கையூட்டும், மனதைக் குளிரவைக்கும் காணொளியாகக் கொண்டுவரலாம் என்றும் அதில் நகைச்சுவையைக் கலந்து மக்களைக் கவரவேண்டும் என்றும் விக்னேஷ்வரனிடம் சொன்னேன்," என்றார்.
'கோஸ்மிக் அல்டிமா பிக்சர்ஸ்' நிறுவனத்தை நடத்தி வரும் விக்னேஷ்வரனும் வடிவழகனும் 'பிளேனட் கலாட்டா', அண்மையில் வெளிவந்த 'வடி, ரெடி, வெடி' போன்ற நிகழ்ச்சிகளில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
"அவர் எழுதிய வசனங்களும் கதையும் அருமையாக இருந்தன," என்று இக்காணொளியில் நடிக்க முன்வந்ததன் காரணத்தைப் பகிர்ந்தார் திரு வடி.
அரசாங்கத்தின் திட்டங்களை மக்களுடன் பகிர்வதை நோக்கமாகக் கொண்டு, தீபாவளி வாழ்த்தை அதனுடன் இணைத்து, வசனம் எழுதி, காணொளியைப் படைத்துள்ளார் திரு எஸ் எஸ் விக்னேஷ்வரன். மின்னிலக்கமாதலை வர்த்தகங்களுக்கு ஊக்குவிப்பது முக்கிய அம்சமாக உள்ளது.
என்னதான் சவால்களை எதிர்நோக்கினாலும் அவற்றில் நல்ல தீர்வுகளைக் காணலாம் என்றும் பலன் தரும் திட்டங்களைச் சாதகமாக்கிக்கொண்டு நம்பிக்கையுடன் அவற்றை எதிர்கொள்ளலாம் என்றும் பார்ப்பவர்கள் அறியலாம்.
கொவிட்-19 காலம் நம்மை இருளில் மூழ்கவைத்தாலும் பிரகாசமான எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்பார்ப்போம் என்ற செய்தியை வெளிக்கொணரும் காணொளி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
"வீடமைப்புப் பேட்டையையும் வெளிச்சத்தையும் மையமாகக் கொண்டு இக்காணொளியைத் தயாரித்தோம். அதனால்தான் வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் கடைவீட்டில், விளக்கு விற்கும் கடை நடத்தும் தமிழ் பேசும் ஒருவரைக் கதாபாத்திரமாகக் கொண்டு இதை எழுதினேன்," என்றார் திரு விக்னேஷ்வரன்.
"இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு எந்தத் திரைப்படமும் திரையரங்குகளில் வராத காரணத்தால் குறும்படம் போலவே இந்தக் காணொளியைத் தயாரிப்பதும் எங்கள் திட்டமாக இருந்தது," என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழில் உள்ள இந்தக் காணொளியை மற்ற இனத்தவரும் கண்டு ரசிக்க, ஆங்கிலத் துணை உரையும் இதில் இடம்பெற்றுள்ளது.

