தீபாவளியை முன்னிட்டு மனிதவள அமைச்சு பல்வேறு சமூக அமைப்புகளுடன் இணைந்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு இனிப்பு, கார பலகாரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்தது.
அந்த முயற்சிக்கு கைகொடுத்த ஓர் அமைப்பு சிலோன் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ செண்பக விநாயகர் கோயில். கடந்த வாரஇறுதி நாட்களான நவம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் பிற்பகல் நேரத்தில் கோயில் மூடப்பட்ட வேளையில் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க கிட்டத்தட்ட 60 தொண்டூழியர்கள் 2,000 பலகார பொட்டலங்களைத் தயாரிக்க உதவினர்.
தீபாவளி விழாக்காலத்தில் கோயில்
களுக்கு சென்று வழிபட முடியாத நிலையில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு இந்த முயற்சி இன்பமளிக்கும் என்று நம்பிக்கையளித்தார் ஸ்ரீ செண்பக விநாயகர் கோயிலை நிர்வகிக்கும் சிங்கப்பூர் இலங்கைத் தமிழர் சங்கத்தின் தலைவர் திரு எஸ்.மோகனரூபன்.
"தீபாவளி என்பது கொண்டாட்டத்திற்கான பண்டிகை. கொவிட்-19 சூழலால் இந்த பண்டிகையைக் கொண்டாட முடியவில்லை என்ற ஏக்கம் பல ஊழியர்களுக்கு இருக்கும். அவர்களை மகிழ்வூட்டுவதற்கான நல்ல முயற்சி இது," என்றார் திரு மோகனரூபன்.
அதேபோல சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோயிலும் தீபாவளி அன்பளிப்புப் பை களை வழங்க ஏற்பாடு செய்தது. ஒவ்வோர் ஆண்டும் தீபாவளித் திருநாளில் சுமார் 12,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு கோயில் சார்பில் அன்னதானம் வழங்கப்படுவதாக அதன் நிர்வாகம் கூறியது.
ஆனால் இவ்வாண்டு கொவிட்-19 சூழல் காரணமாக தீபாவளிக் கொண்டாட்டத்தை கோயில் அமைந்துள்ள தொகுதிக்குள்ளேயே பாதுகாப்புடன் வழிநடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. புளோக் 47 ஓவன் ரோட்டில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டன.
தீபாவளிக்காக 190 அன்பளிப்புப் பைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அரிசி, பிஸ்கெட், பானம், கொவிட்-19 முகக்கவசம், தீபாவளிப் பலகாரங்கள் ஆகியன அந்தப் பைகளில் நிரப்பப்பட்டன.
மோல்மின் கேர்ன்ஹில் குடிமக்கள் ஆலோசனைக் குழுவும் ஓவன் ரோடு வசிப்போர் குழுவும் இந்த முயற்சிக்குக் கைகொடுத்தன.
அன்பளிப்புப் பைகளை வழங்கும் பணியில் 16 தொண்டூழியர்கள் ஈடுபட்டதாக ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோயில் நிர்வாகம் தெரிவித்தது. குடியிருப்பாளர் களை தொண்டூழியர்களோடு கலாசார, சமூக, இளையர் துறை துணை அமைச்சர் எல்வின் டானும் சென்று சந்தித்தார்.

