சான் சுன் சிங்: வட்டார வர்த்தகத்தை எளிதாக்கும் உடன்பாடு

சான் சுன் சிங்: வட்டார வர்த்தகத்தை எளிதாக்கும் உடன்பாடு

2 mins read
77ac1c89-5f1f-402f-a7b5-c6682d883a70
-

புதிதாகக் கையெழுத்தான வட்டார அளவிலான தாராள வர்த்தக உடன்பாடு நடைமுறைக்கு வரும்போது நிறுவனங்கள் வட்டார அளவில் வர்த்தகங்களை மேற்கொள்வது எளிதாகவும் மலிவாகவும் இருக்கும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

வட்டார பரந்த பொருளியல் பங்காளத்துவ உடன்பாட்டில் (ஆர்சிஇபி) கையெழுத்திட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு சான், "இந்த உடன்பாடு வர்த்தகங்களுக்கு சிறந்த அறிவுச்சொத்து பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் பங்காளித்துவ நாடுகளில் தங்கள் உற்பத்தியை ஒருங்கிணைக்க இது உதவுகிறது. செலவையும் நேரத்தையும் மிச்சப்படுத்த இது வழிவகுக்கும்," என்றார். "இந்த வர்த்தக இணக்கத்தில் இடம்பெறும் நாடுகள் முதலீட்டிற்கான ஒருங்கிணைந்த சந்தையை வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். குறிப்பாக தொழில்நுட்பம், கேந்திர அரசியல் காரணமாக உலகளாவிய விநியோகத் தொடர்களும் உலகளாவிய உற்பத்தித் தொடர்களும் மாற்றி அமைக்கப்படும் வேளையில் இந்த ஒருங்கிணைந்த சந்தை தேவை," என்று அவர் கூறினார். அதிகமான தயாரிப்புகள் மூலம் பயனீட்டாளர்களும் பயனடைவர். அத்துடன் இந்த உடன்பாட்டில் இடம்பெறும் நாடுகளிடையே வர்த்தகம் செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கான தீர்வைகள் நீக்கப்படுவதால் கட்டுப்படியாகும் விலையில் பொருட்கள் கிடைக்கும் என்று திரு சான் கூறினார். புருணை, கம்போடியா, இந்தோனீசியா, லாவோஸ், மலேசியா, மியன்மார், பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய 10 ஆசியான் நாடுகளும், முக்கிய பங்காளிகளான ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து ஆகியவையும் வட்டார பரந்த பொருளியல் பங்காளத்துவ உடன்பாட்டில் இன்று கையெழுத்திட்டன.

இந்த நாடுகள் உலக பொருளாதாரத்தில் 30 விழுக்காட்டையும் உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியையும் கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நன்மைகளில், இந்த நாடுகள் இடையே வர்த்தகம் செய்யப்படும் குறைந்தது 92% பொருட்களுக்கான தீர்வையை நீக்குதல், செயல்திறன் நிபந்தனைகளின்றி ஆர்சிஇபி நாடுகளில் முதலீடு செய்ய வர்த்தகங்களை அனுமதிப்பது உள்ளிட்டவை அடங்கும்.

இதன் விளைவாக, ரசாயனம், நெகிழி, பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவற்றைக் கையாளும் வர்த்தகங்கள், குறிப்பாக சீனா, ஜப்பான், தென்கொரியாவுக்கான ஏற்றுமதிக்கான செலவு குறைப்பைக் காணலாம்.

விரைவுச் சரக்குகள், கெட்டுப்போகக்கூடிய பொருட்களுக்கு ஆறு மணி நேரத்திற்குள் சுங்கத்துறை அனுமதி வழங்க வேண்டும். இந்த உடன்பாட்டின் பலன்கள் சீனா போன்ற பெரிய நாடுகளுக்கு சாதகமாக இருப்பது பற்றி எழுப்பப்பட்ட கவலைகளுக்கு பதிலளித்த திரு சான், உள்நாட்டுச் சந்தைக்கு வெளியே கால் பதிக்க விரும்பும் சீன நிறுவனங்களுக்கும் சீனாவில் வர்த்தகம் செய்ய விழையும் மற்ற நாடுகளின் நிறுவனங்களுக்கும் பரஸ்பர நன்மைகளை இது ஏற்படுத்தும் என்றார்.

இது சீனா, வட்டார சந்தைகளை ஒருங்கிணைந்த சந்தையாக்குவதால், உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு அதிக ஈர்ப்புடையதாக இருக்கும். அத்துடன், மற்ற நாடுகளுக்கான ஏற்றுமதியின் போட்டித்தன்மையை மேம்படுத்தும் என்றும் அவர் சொன்னார்.

இந்த இணக்கம், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முயற்சி. இது வட்டார வர்த்தக ஒருங்கிணைப்பை மேலும் வளர்க்கும் என்று அமைச்சர் சான் குறிப்பிட்டார்.