த்ற்போதைய கொவிட்-19 கிருமித்தொற்றுச் சூழலில் பலரும் வேலை இழந்துள்ளனர், வேறு சிலரோ வீட்டில் முடங்கிக்கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
நிதிச் சுமையை எதிர்கொள்ளும் பல இந்திய குடும்பங்களைத் தீபாவளி பண்டிகையின்போது மகிழ்விக்கும் நோக்கத்தில் தொண்டூழியக் குழு ஒன்று களமிறங்கியது.
'இதயங்களுக்கு ஒளியூட்டுதல், இல்லங்களுக்கு ஒளியூட்டுதல்' என்ற திட்டத்தின்கீழ் செயல்படும் தொண்டூழியர்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக வசதி குறைந்த இந்தியக் குடும்பங்களுக்கு தீபாவளி உணர்வைப் பரப்பி வருகின்றனர்.
தீபாவளியை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் வசதி குறைந்த குடும்பங்களின் இல்லங்களுக்குச் சென்று பண்டிகைக்கு தேவையான மளிகைப் பொருட்களையும் வீட்டில் செய்த பலகாரங்களையும் தொண்டூழியர்கள் வழங்குவது வழக்கம்.
ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான தொண்டூழியர்கள் ஒன்றுகூடி, அன்பளிப்புப் பைகளைத் தயார் செய்து, வாகனங்களில் ஏற்றி, தீவின் பல பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யும் நடைமுறை தற்போதைய கொவிட்-19 கட்டுப்பாடுகளால் இடம்பெறவில்லை.
அதற்குப் பதிலாக, முன்கூட்டியே அன்பளிப்புப் பைகளை தயாரித்து, தீவின் 20 இடங்களிலிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
இம்மாதம் முதல் வாரம் முழுவதும் தொண்டூழியர்களின் முயற்சியால் இந்த அன்பளிப்புப் பைகள் குடும்பங்களிடம் விநியோகிக்கப்பட்டன.
"இத்திட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவினர், ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காமல் 'ஸூம்' மெய்நிகர் சந்திப்பு, 'வாட்ஸ்அப்' செயலி, தொலைபேசி உரையாடல் ஆகிய வற்றின் வழி சந்திப்புகளை மேற்கொண்டு கடந்த நான்கு மாதங்களாக தொண்டூழியப் பணிக்குத் திட்டமிட்டு வந்தோம்.
"எங்களது முயற்சிக்குத் தொண்டூழியர்கள் தேவை என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட ஒரு சில மணி நேரத்தில் பலரும் உதவ முன்வந்தனர்," என்று தெரிவித்தார் இத்திட்டத்தில் 2015ஆம் ஆண்டிலிருந்து இணைந்துள்ள அரசாங்க ஊழியரான குமாரி மலர், 41.
மூன்று ஆண்டுகளுக்கு முன், இத்திட்டத்தில் அன்பளிப்புப் பைகளில் பொருட்களை நிரப்பும் நடவடிக்கையைத் தொடங்கிய 30 வயது திரு கணேசன் சோமா, இப்போது ஏற்பாட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
"கொவிட்-19 கிருமித்தொற்று நிலவரத்தால் பொருளியல் ரீதியிலும் மனதளவிலும் சமூகத்தில் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இத் தருணத்தில் அவர்களுக்குக் கூடுதல் உதவி தேவை என்பதை உணர்கிறோம்," என்றார் திட்ட மேலாளராகப் பணியாற்றும் கணேசன்.
குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புப் பைகளில் $120 ரொக்கம், என்டியுசி ஃபேர்பிரைஸ் பற்றுச்சீட்டுகள், வண்ண தீபாவளி மெழுகு விளக்குகள், பலகாரங்கள் ஆகியவை அடங்கியுள்ளன.
கடந்த ஆண்டு இத்திட்டத்திற்கு 'கிரான்பெர்ரி பிஸ்கெட்டு'களைத் தயாரிக்க உதவிய திருமதி பெரியநாயகி தேவன், இவ்வாண்டு 10 போத்தல்களில் 'சூஜி' பலகாரங்களை வீட்டில் தயாரித்தார்.
"மற்ற இனத்தவர்களும் பலகாரங்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். பொருட்களை எங்கு வாங்குவது, பலகாரத்தை எப்படிச் செய்வது போன்ற தகவல் பரிமாற்றம் எங்களுக்குள் நடக்கும்.
"பொருள் கொடுத்துதான் பங்களிக்க முடியும் என்றில்லாமல் எங்களால் முடிந்த சிறிய அளவில் பண்டிகையின்போது பிறருடன் மகிழ்ச்சியைப் பகிர முடிகிறது," என்றார் தமது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இம்முயற்சியில் ஒருங்கிணைந்த இல்லத்தரசியான திருமதி பெரியநாயகி, 59.
ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகள் குடியிருந்துவிட்டு தாயகம் திரும்பிய பின்னர் இம்முறை குடும்பத்தினருடன் சேர்ந்து தீபாவளியைக் கொண்டாடிய குமாரி ஷிவாணி பிரம்மதேவன், தெம்பனிசில் வசிக்கும் எட்டுக் குடும்பங்களிடம் அன்பளிப்புப் பைகளை வழங்க உதவினார்.
"ஒரு வீட்டில் குடும்பத் தலைவர் எட்டு மாதங்களாக வேலையின்றி இருப்பதை நான் அறிந்தேன். அன்பளிப்புப் பை தமது குடும்பத்திற்கு உதவியாக இருக்கும் என்று அவர் சொன்னார்.
"அர்த்தமுள்ள ஒரு காரியத்தில் ஈடுபட்டதில் எனக்கு மிகுந்த திருப்தி ஏற்பட்டது," என்றார் கணக்காளரான ஷிவாணி, 26.
அன்பளிப்புப் பைகளில் பொருட்களை நிரப்புவது, பலகாரங்களைத் தயாரிப்பது, சொந்த வாகனத்தில் பைகளை ஏற்றி அவற்றைக் குடும்பங்களிடம் விநியோகிப்பது என கிட்டத்தட்ட 350 தொண்டூழியர்களின் பங்களிப்பு இத்திட்டத்தில் அடங்கியுள்ளது.
ஏறத்தாழ 1,500 குடும்பங்களில் மகிழ்ச்சி ஒளிவெள்ளம் பெருக இவர்களது பங்கு அளப்பரியது. இந்த முயற்சிக்கு மொத்தம் $204,000 மதிப்பிலான நன்கொடை திரட்டப்பட்டது.
ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து வரும் இந்த முயற்சிக்கு சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கமும் (சிண்டா) ஸ்ரீ நாராயண மிஷன் போன்ற பல அமைப்புகளும் ஆதரவு தந்துள்ளன.

