பண்டிகை காலத்தில் அறப்பணி செய்து மற்றவர்களிடம் புன்னகையைப் பகிர்கிறது 'விஷ் ஏ ஸ்மைல்' அறநிறுவனம். ஐந்து நாட்களில் $60,000க்கும் அதிக மதிப்புடைய தீபாவளிப் பரிசுகளையும் ரொக்க அன்பளிப்புகளையும் வசதி குறைந்த குடும்பங்களிடம் வழங்கி அவர்களது இல்லங்களில் விழாக்கால உணர்வை இந்த அறநிறுவனம் பரப்பியது.
2015ஆம் ஆண்டு திரு ர.பாலகிருஷ்ணன் தலைமையில் தொடங்கப்பட்ட இந்த அறநிறுவனத்தில் சிங்கப்பூர், இந்தியா, இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வசிக்கும் ஏறத்தாழ 140 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். உதவி தேவைப்படுவோருக்கு உதவிக்கரம் நீட்டி சமூகத் தொண்டை இந்த அறநிறுவனம் புரிந்து வருகிறது.
'விஷ் ஏ ஸ்மைல்' அறநிறுவனம், சமூகத்திற்குத் தங்களால் முடிந்த உதவியைப் புரிய விரும்பும் தனிநபர்களைக் கொண்டு உள்ளது.
மொழி, சமயம், இனம் ஆகியவற்றைத் தாண்டி உதவி தேவைப்படுவோருக்கு தக்க சமயத்தில் உதவி வழங்குவதை இந்த அறநிறுவனம் நோக்கமாக கொண்டு உள்ளது.
"சென்னையில் வெள்ள நிவாரணப் பணிகள், சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சைக்கு நிதி தேவைப்படும் குடும்பங்கள், சட்ட ரீதியில் ஆலோசனை தேவைப்படும் குடும்பங்கள், மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டோர் போன்ற பலருக்கும் நாங்கள் கைகொடுக்க முயற்சி எடுத்து வருகிறோம்," என்று 'விஷ் ஏ ஸ்மைல்' அறநிறுவனத்தின் பொதுச் செயலாளர் ஜே.கே.சரவணா தெரிவித்தார்.
'ஸ்மைல் தீபாவளி' என்று அழைக்கப்படும் இந்த தீபாவளி அன்பளிப்புப் பைகளை விநியோகிக்கும் பணி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.
2018ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 50 குடும்பங்களுக்கு உதவி புரிந்த இந்த அறநிறுவனம், இந்த ஆண்டு மொத்தம் 204 குடும்பங்களிடம் தீபாவளிக்குத் தேவையான பொருட்கள் அடங்கிய அன்பளிப்புப் பைகளையும் $150 ரொக்கத்தையும் வழங்கியது.
ஒவ்வோர் அன்பளிப்புப் பையிலும் பூஜைக்குத் தேவையான பொருட்கள், சமையல் பொருட்கள், மத்தாப்பு, முறுக்கு என 35க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளன.
'ஸ்மைல் தீபாவளி' அன்பளிப்புப் பைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதி குறைந்த குடும்பங்களை அடையாளம் காண, சிண்டாவின் குடும்ப சேவை மையம், அங் மோ கியோ-செங் சான் குடும்ப சேவை மையம் மற்றும் ரோட்டரி குடும்ப சேவை மையம் ஆகிய அமைப்புகள் உதவியுள்ளன.

