நெருங்கிய நண்பர்கள் சிலர், காற்பந்து விளையாட்டு மூலம் தொடர்புகளை நிலைநாட்டலாம் என்று எண்ணி 'லேப்பாக் ஃபூட்டி' எனும் பொழுதுபோக்கு காற்பந்துக் குழு ஒன்றை ஐந்து ஆண்டுகளுக்கு முன் அமைத்தனர்.
பல்வேறு பின்னணியைச் சேர்ந்த 30 உறுப்பினர்கள் கொண்ட இக்குழுவினர், ஒவ்வொரு வாரமும் தவறாமல் காற்பந்து ஆட்டத்திற்காக ஒன்றுகூடுவர். ஆனால், கொவிட்-19 கிருமித்தொற்று கட்டுப்பாடுகளால் ஆறு மாதங்களுக்கும் மேலாக இவர்கள் திடல் பக்கம் போகவில்லை.
கொவிட்-19 கிருமித்தொற்று பல குடும்பங்களின் வருமானத்தைப் பாதித்துள்ளது. அதைக் கருத்தில் கொண்டு, இம்மாதம் 8ஆம் தேதி காற்பந்துக் காலணி களுடன் 'ஃபுட்சால்' திடலுக்கு செல்வதற்குப் பதிலாக, கைகளில் மளிகைப் பொருட்களுடன் தீவின் பல பகுதிகளில் வசிக்கும் இந்திய குடும்பங்களுக்கு ஆதரவு நல்க இக்குழுவினர் களமிறங்கினர்.
நன்கொடையும் கொடுத்து ஆதரவாளர்களையும் திரட்டிய இவர்கள், பொன்னி அரிசி, மசாலா, காப்பித் தூள், முறுக்கு, குக்கீஸ், சவர்க்காரம், ஷாம்பூ, குளியல் துண்டு, பேரங்காடி பற்றுச்சீட்டுகள், முகக்கவசங்கள், கிருமி நாசினி என 20க்கும் மேற்பட்ட அத்தியாவசிய பொருட்களைச் சேகரித்தனர்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏறத்தாழ $200 மதிப்புள்ள அன்பளிப்புப் பைகளை இவர்கள் தயார் செய்தனர்.
புக்கிட் பாத்தோக், புக்கிட் பஞ்சாங், மார்சிலிங், அல்ஜுனிட் போன்ற வீடமைப்புப் பேட்டைகளில் வசிக்கும் 30 குடும்பங்களிடம் அன்பளிப்புப் பைகளை 'லேப்பாக் ஃபூட்டி' குழுவினர் கொண்டு சேர்த்தனர்.
இதுபோன்ற தொண்டூழியப் பணிகளில் இக்குழுவினர் ஈடுபடுவது இது புதிதல்ல.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் முரசு நடத்திய சிறுவர்களுக்கான 'ஃபுட்சால்' காற்பந்துப் போட்டிப் பரிசுகளுக்கு இவர்கள் நன்கொடை அளிக்க முன்வந்தது நினைவுகூரத்தக்கது.
அதுமட்டுமல்லாமல், சில ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவின் கிள்ளான் பகுதியில் ஆதரவற்றோர் இல்லங்களில் வசித்த பிள்ளைகளுக்கு விளையாட்டு சாதனங்கள், ரொக்க நன்கொடை, உணவு ஆகியவற்றை 'லேப்பாக் ஃபூட்டி' குழுவினர் நேரில் சென்று வழங்கினர்.
"சிலர் பெரிய வீவக வீடுகளில் வசித்தாலும், குடும்ப உறுப்பினர்கள் வேலையை இழந்ததில் நிதி நிர்வாகத்தில் பல சிரமங்கள் எதிர்நோக்குவதாக எங்களிடம் கூறினர்.
"இதுபோன்ற குடும்பங்களுக்கு நாங்கள் புரிந்த உதவி அவர்களுக்கு உறுதுணையாக இருந்ததை எண்ணி மகிழ்கிறோம்," என்று தெரிவித்தார் 'லேப்பாக் ஃபூட்டி' குழுவின் மூத்த உறுப்பினரான திரு சதீஷ் நாயுடு, 53.
"லேப்பாக் ஃபூட்டி குழுவில் இடம்பெற்றுள்ள பலரும் நல்ல வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். காற்பந்து விளையாடுவதோடு நிறுத்திவிடாமல் சமூகத்திற்குப் பங்களிக்க நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம்.
"உள்ளூரில் தொண்டூழிய ஆதரவு தேவைப்படும் அமைப்புகளுடன் சேர்ந்து செயல்பட்டு சமூகத்தின் வெவ்வேறு பிரிவினருக்குப் பங்களிப்பது எங்களது குழுவின் அடுத்த இலக்காகும்," என்றார் சொந்த தொழிலில் செய்யும் திரு ராஜ்பீர் சிங் சொப்ரா, 36.
ஆண்டு இறுதிக்குள் காற்பந்து விளையாட இவர்கள் மீண்டும் கூடுவார்களா என்பது இன்னும் தெரியவில்லை.
எனினும், கிறிஸ்மஸ் பண்டிகைக்காலத்தில் 'லேப்பாக் ஃபூட்டி' காற்பந்துக் குழு வேறொரு சமூகப் பணியில் ஈடுபட ஆயத்தமாகி வருகிறது.

