மேப்பிள் பியர் பாலர் பள்ளிகளைச் சேர்ந்த 3,000 மாணவர்கள் பலகாரங்கள் செய்வது முதல் குறைந்த தூரத்திற்கான மராத்தான்கள் செய்து வசதி குறைந்த சிறுவர்களுக்காக நிதி திரட்டினர்.
சிறுவர் தினத்தை முன்னிட்டு அக்டோபர் மாதம் 107,777 வெள்ளியை இந்த பாலர்கள் நன்கொடையாக வழங்கினர்.
சிங்கப்பூர் முழுவதும் இந்த பாலர் பள்ளிகளைச் சேர்ந்த சிறுவர்கள் இனிப்பு பலகாரங்கள் செய்து விற்பது, குறைந்த தூரத்திற்கான ஓட்டப்பந்தயம் போன்ற பலவிதமான நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.
அவர்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒவ்வொரு நிமிடத்திற்கும் பெற்றோர் 1 வெள்ளி நன்கொடையாக வழங்கினர்.
இந்த சிறுவர்கள் பக்கவாட்டாகவும் பின்னோக்கி நடந்தும் தங்கள் திறமையை நிரூபித்தனர்.
மேப்பிள் பியர் சிங்கப்பூரின் தலைமை நிர்வாகி கூறுகையில், "இந்த ஆண்டு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு மத்தியில் மக்கள் நன்கொடைகளைத் தாராளமாக வழங்கியது எங்களின் எதிர்பார்ப்புகளை எல்லாம் மீறிவிட்டது.
"சென்ற ஆண்டுகளில் சிறுவர்கள் ஒன்றுசேர்ந்து நிதி திரட்டியதுபோல் இந்த ஆண்டு செய்ய முடியவில்லை. பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடித்து நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்பதே எங்களின் குறிக்கோளாக இருந்தது.
இருப்பினும் குழந்தைகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் நன்கு ஒத்துழைத்தனர். குழந்தைகள் 2 வயது முதல் 6 வயதிற்குட்பட்டவர்களாக இருந்தாலும் நிலைமையைப் புரிந்துகொண்டு செயல்பட்டதைக் காணும்போது மகிழ்ச்சியாக இருந்தது," என்றார்.

