ஏழு பதின்மவயது சிறுவர்களை மானபங்கம் செய்த குற்றத்துக்காக உயர்நிலைப்பள்ளி ஒன்றின் முன்னாள் தலைமையாசிரியருக்கு மூன்று ஆண்டு, எட்டு மாதங்கள் சிறைத் தண்டனையும் ஏழு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
மானபங்க சம்பவங்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் 13 வயதுக்கும் 15 வயதுக்கும் உட்பட்டவர்கள். அவர்கள் அனைவருக்கும் குடும்பப் பிரச்சினைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. வீட்டிலும் வெளியிலும் அவர்கள் ஒழுங்கின்றி நடந்துகொண்டவர்கள்.
மூன்று சிறுவர்களை மானபங்கம் செய்ததாக அந்த 48 வயது முன்னாள் தலைமையாசிரியர் ஒப்புக்கொண்டார்.
சிறுவர்களின் அடையாளத்தைக் காக்க முன்னாள் தலைமையாசிரியரின் பெயரையும் தொடர்புடைய பள்ளியின் பெயரையும் வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒழுங்கீன விவகாரங்கள் பற்றி பேசப்போவதாகக் கூறி சிறுவர்களைத் தமது அலுவலகத்துக்கு அழைத்து அங்கு அவர்களை அந்த முன்னாள் தலைமையாசிரியர் மானபங்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.

