கொவிட்-19க்கு காரணமான Sars-CoV-2 கிருமியானது, உறைநிலையில் இருக்கும் மீன்கள், கோழி இறைச்சி, பன்றி இறைச்சி போன்றவற்றின் மீது குளிரூட்டப்பட்ட வெப்பநிலையில், சுமார் 3 வாரங்கள் வரை உயிருடன் இருக்கும் என்று சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியின் ABSL3 ஆய்வகத்தின் அறிவியல் இயக்குநர் மருத்துவர் டேனியல் ஆண்டர்சன், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் டேல் ஃபிஷர் அகியோர் இணைந்து, உறைநிலைக்கு குளிரூட்டப்பட்ட உணவில் அந்த கிருமியின் வாழ்நாள், அதன் நோயுண்டாக்கும் திறன் போன்றவை பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
உள்ளூர் சந்தைகளில் சேகரிக்கப்பட்ட சால்மன் மீன், கோழிக்கறி, பன்றி இறைச்சி போன்றவற்றின் மீது கிருமி அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த உணாவுப்பொருள் மாதிரிகள் 4 முதல் -80 டிகிரி செல்சியஸ் வரை பல்வேறு வெப்பநிலைகளில் வைக்கப்பட்டிருந்தவை.
அவற்றின் மீதிருந்த கிருமிகள், 4, -20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைகளில் நோயை உருவாக்கும் நிலையில் சுமார் 3 வாரங்கள் வரை இருந்தது கண்டறியப்பட்டது.
போக்குவரத்து, சேமிப்பு போன்ற சூழல்களிலும் கிருமி தொடர்ந்து உயிருடன் இருந்தது. கொரோனா கிருமி பாதிக்கப்பட்ட உணவைக் கையாண்ட ஒருவர் மூலம் கிருமித்தொற்று பரவும் அபாயம் இருப்பதையும் அந்த ஆய்வு சுட்டிக் காட்டியது.
இதன் தொடர்பிலான ஆய்வைத் தொடர இந்தக் குழுவுக்கு உலக சுகாதார நிறுவனம் நிதியுதவியும் வழங்கியுள்ளது.
கொவிட்-19 நோய்கண்ட ஊழியர் ஒருவர் உணவுப் பொருளைப் பொட்டலமிடும்போது அவரால் அந்த உணவு கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாவது, கொவிட்-19 பாதிப்புக்குள்ளான உணவை உட்கொள்வதால் மனிதர்களுக்குத் தொற்று ஏற்படும் சாத்தியம் ஆகியவை பற்றி அந்தக் குழு தற்போது ஆய்வு மேற்கொண்டுள்ளது.