ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதில் பாரபட்சத்துடன் நடந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் பல முதலாளிகள் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள் என்று வேலைவாய்ப்பு நடைமுறை பற்றிய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், 'டஃபேப்' எனப்படும் நியாயமான, படிப்படியான வேலை நடைமுறைகளுக்கான முத்தரப்புப் பங்காளித்துவ அமைப்பு இந்த ஆண்டின் முற்பாதியில் கிட்டத்தட்ட 260 சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தியுள்ளன என்றும் இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்புநோக்க விசாரிக்கப்பட்ட 160 சம்பவங்களை விட 60% அதிகம் என்றும் அந்த அமைப்பு இன்று (நவம்பர் 19) வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
இதன் விளைவாக இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் வரை சுமார் 90 முதலாளிகளுக்கு வேலை அனுமதி சலுகைகளைப் பயன்படுத்த தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டு முழுமைக்கும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்ட 35 முதலாளிகளைக் காட்டிலும் அதிகம்.
அதாவது, அவர்கள் புதிய வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தவோ தற்போதுள்ள வெளிநாட்டு ஊழியர்களின் வேலை அனுமதியை நீட்டிக்கவோ மனிதவள அமைச்சு தடை விதித்துள்ளது.
அமைச்சின் தீவிரமான புலனாய்வு முயற்சிகளின் வழி சுமார் 43 விழுக்காட்டினர் அடையாளம் காணப்பட்டனர்.
எஞ்சியுள்ள 57 பேர் அமைச்சு மற்றும் டஃபேப் அமைப்புக்குக் கிடைத்த புகார்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டனர் என்றும் அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
நியாயமான வேலை வாய்ப்பு நடைமுறைகளுக்கான முத்தரப்பு வழிகாட்டிகளை மீறும் முதலாளிகளுக்கு, இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கடுமையான தண்டனைகளின் அடிப்படையில் புதிய வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தவோ அல்லது தற்போதைய ஊழியர்களின் வேலை அனுமதியை நீட்டிக்கவோ 12 முதல் 24 மாதங்களுக்கு தடை விதிக்கப்படும்.
வேலைக்கு ஆள் தேடும்போது பாரபட்சம் காட்டும் போக்கு 2014ஆம் ஆண்டில் 10 விழுக்காடாக இருந்தது. அது 2018ல் 15 விழுக்காட்டுக்கு உயர்ந்தது என்று மனிதவள அமைச்சு, டஃபேப் அமைப்பு, சச்சரவு நிர்வாகம் தொடர்பான முத்தரப்புப் பங்காளித்துவ அமைப்பு ஆகியவை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
சுமார் 470 முதலாளிகள் செலவு குறைப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் என்பதைச் சுட்டி இவ்வாண்டு மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை 580 புகார்கள் கிடைக்கப்பெற்றதாக அமைச்சு விவரித்தது.
அந்த நடவடிக்கைகள் நியாயமானதா என்பதை அமைச்சு ஆராய்ந்து அவற்றில் பெரும்பாலான சச்சரவுகளுக்குத் தீர்வு கண்டது.
டஃபேப் அமைப்பு நடத்திய விசாரணையில் சுமார் 900 முதலாளிகள் மேற்கொண்ட சம்பள வெட்டு நடவடிக்கையால் கிட்டத்தட்ட 52,000 ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அது மேற்கொண்ட நடவடிக்கைக்குப் பிறகு கிட்டத்தட்ட 330 முதலாளிகள் தங்கள் சம்பள வெட்டு நடவடிக்கைகளை மறுஆய்வு செய்ய ஒப்புக்கொண்டனர்.
எஞ்சிய முதலாளிகள் தாங்கள் எடுத்த நடவடிக்கைகளுக்கு நியாயமான வகையில் விளக்கம் அளித்தனர்.
ஒட்டுமொத்தத்தில், மனிதவள அமைச்சின் தலையீட்டால், ஐந்தில் ஒரு முதலாளி தங்கள் ஊழியர்களுக்கு மேம்பட்ட ஆதரவளிக்கவும் தங்கள் செலவு குறைப்பு நடவடிக்கைகளை மறுஆய்வு செய்யவும் இணக்கம் தெரிவித்தனர் என்றும் அமைச்சு கூறியது.

