சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் டெங்கியால் மாண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.
செப்டம்பர் மாத இறுதிவரை மொத்தம் 29 பேர் டெங்கி பாதிப்பால் உயிரிழந்துவிட்டனர்.
கொவிட்-19 கிருமித்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆக உள்ளது. 2005ஆம் ஆண்டில் டெங்கியால் உயிரிழந்தவர்கள் 25 பேர். இதுவே ஆக அதிக உயிரிழப்பு எண்ணிக்கையாக இருந்தது. ஆனால் இவ்வாண்டு இன்னும் முடிவடையாத நிலையில் உயிரிழப்பு 29 ஆகிவிட்டது.
காலாண்டு அடிப்படையில் டெங்கி உயிரிழப்புகள் கணக்கிடப்படுவதால் மேலும் அதிக டெங்கி உயிரிழப்புகள் நேர்ந்திருக்குமா என்று கேட்கப்பட்டதற்கு சுகாதார அமைச்சு பதில் அளிக்க மறுத்துவிட்டது.
டெங்கியால் உயிரிழந்த 29 பேரில், முதல் காலாண்டில் எழுவரும் இரண்டாம் காலாண்டில் ஒன்பது பேரும் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை 13 பேரும் அடங்குவர். தேசிய சுற்றுப்புற அமைப்பு இம்மாதம் வெளியிட்ட காலாண்டு டெங்கிக் கண்காணிப்புத் தரவு மூலம், டெங்கியால் உயிரிழந்தோரின் வயது 25க்கும் 92க்கும் இடைப்பட்டது என்று தெரியவந்துள்ளது.
இவ்வாண்டின் டெங்கித் தொற்று, சிங்கப்பூரில் இதுவரை ஏற்பட்டிராத ஆக மோசமானது என்று கூறப்படுகிறது. அதிகமானோர் டெங்கியால் பாதிக்கப்பட்டதுடன் உயிரிழப்புகளும் அதிகமாகிவிட்டன.
இதுவரை சுமார் 34,000 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சென்ற ஆண்டு பதிவான டெங்கிச் சம்பவங்களைவிட 50% அதிகமாகும்.
ஆனால் 100,000க்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கி பாதிப்பு இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில், பலர் மருத்துவரைச் சென்று பார்க்காமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜூலை மாதத்தில் ஒரே வாரத்தில் 1,792 பேருக்கு டெங்கித் தொற்று உறுதியானது. பலமுறை எச்சரித்தும் இல்லங்களிலும் பொது இடங்களிலும் ஆயிரக்கணக்கான டெங்கி இனப்பெருக்கப் பகுதிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
ஜூலைக்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் 6,800 இனப்பெருக்க இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆனால் கடந்த நான்கு வாரங்களில் உறுதிசெய்யப்படும் டெங்கிச் சம்பவங்கள் குறைந்து வருகின்றன. சென்ற வாரம் 355 சம்பவங்கள் பதிவாகின.
கொசு ஒழிப்பு தொடர்பில் தனியார் தரைவீடுகளுக்கு உதவி
தனியார் தரைவீடுகளில் வசிப்போருக்குக் கொசு ஒழிப்பு தொடர்பான பொருட்களை தேசிய சுற்றுப்புற அமைப்பு வழங்கவுள்ளது.
அதிகாரிகள் இவ்வகை வீடுகளில் அதிகமான கொசு இனப்பெருக்க இடங்களைக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. தகவல் ஏடு, கொசுப் புழுக்களை அழிக்க உதவும் மருந்து, ஒட்டுவில்லைகள், குளிர்சாதனப் பெட்டி மீது இடுவதற்கான காந்த வில்லைகள் போன்றவை குடியிருப்பாளர்களுக்குத் தரப்படும்.

