தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) அதன் உதவி நிதிக்கான விண்ணப்பங்களை மீண்டும் துவங்கியுள்ளது. அத்துடன் நிதியுதவி பெறுவோருக்கான தகுதி நிபந்தனைகளையும் அது விரிவுபடுத்தியுள்ளது.
கொவிட்-19 கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு நிவாரணத் தொகை கிடைப்பதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டது. சுமார் 65,000 சங்க உறுப்பினர்களுக்கு $50 முதல் $300 வரையிலான வழங்குதொகைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் முறையாக தொடங்கப்பட்ட திட்டத்தின் மூலம் சுமார் 30,000 சங்க உறுப்பினர்கள் பலனடைந்தனர். இவர்களுக்குத் தரப்பட்ட வழங்குதொகையின் மொத்த மதிப்பு $8 மில்லியன். ஒதுக்கப் பட்ட $25 மில்லியனில் மேம்படுத்தப்பட்ட உதவி நிதித் திட்டத்திற்காக எஞ்சிய $17 மில்லியன் செலவிடப்படும் என்று என்டியுசி நேற்று தெரிவித்தது.
முதல் முறை விண்ணப்பித்துத் தகுதிபெற்றவர்களுக்கு டிசம்பர் முற்பாதியில் வழங்குதொகை கிடைக்கும் என்று கூறப்பட்டது.
மேம்படுத்தப்பட்ட உதவி நிதித் திட்டத்திற்குத் தகுதிபெற இவ்வாண்டு நவம்பர் 23 முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28 வரை விண்ணப்பிக்கலாம்.

