மக்கள் செயல் கட்சி தனது 36வது மத்திய செயற்குழுவில் இடம்பெற்றவர்களின் இறுதிப் பட்டியலை நேற்று வெளியிட்டது.
அதன்படி, நான்கு புதிய உறுப்பினர்கள் மத்திய செயற்குழுவில் இடம்பெற்றுள்ளனர். திரு எட்வின் டோங், திரு இங் சீ மெங், திரு அலெக்ஸ் யாம், திரு விக்டர் லாய் ஆகியோரே அந்த நால்வர்.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சருமான திரு டோங்கும் திரு யாமும் கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
தொழிலாளர் இயக்கத்தின் தலைவரான திரு இங், செங்காங் குழுத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டார்.
அதேபோல, திரு லாய், அல்ஜுனிட் குழுத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அரசாங்கத்துக்கும் தொழிலாளர் இயக்கத்துக்கும் பல்லாண்டுகளாக நெருங்கிய தொடர்பு இருப்பதால், தொழிற்சங்கங்களின் பிரதிநிதியாக திரு இங், மக்கள் செயல் கட்சியின் மத்திய செயற்குழுவில் இணைத்துக்கொள்ளப்படுவார் என்று அரசியல் கவனிப்பாளர்கள் எதிர்பார்த்தனர்.
மசெக மத்திய செயற்குழுவில் பொறுப்பு வகிப்பவர்களும் நேற்று தேர்வு செய்யப்பட்டனர்.
பிரதமர் லீ சியன் லூங், கட்சியின் தலைமைச் செயலாளர்.
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் முறையே கட்சியின் முதலாம், இரண்டாம் உதவித் தலைமைச் செயலாளர்களாகத் தொடர்கின்றனர்.
அமைச்சர்கள் டெஸ்மண்ட் லீயும், கிரேஸ் ஃபூவும் கட்சியின் ஒருங்கிணைப்புச் செயலாளர்களாகத் தொடர்கின்றனர்.
கட்சியின் தலைவராக அமைச்சர் கான் கிம் யோங், துணைத் தலைவராக அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, பொருளாளராக அமைச்சர் கா. சண்முகம், துணைப் பொருளாளராக அமைச்சர் ஓங் யி காங் தேர்வு பெற்றனர்.