அடுத்த தலைமுறையினருக்கு இணையப் பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றி போதிக்க சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு (சிஎஸ்ஏ), சிங்கப்பூர் கல்வியாளர்களுடன் அணுக்கமாகப் பணியாற்றவிருக்கிறது.
அந்த வகையில் சிஎஸ்ஏ அமைப்பு, ஆசிரியர்கள், பள்ளித் தலைவர்கள், வாழ்க்கைத் தொழில் வழிகாட்டி ஆலோசகர்கள் ஆகியோருக்காக எஸ்ஜி இணையக் கல்வியாளர்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தும்.
அதன் மூலம் அவர்கள் இணையப் பாதுகாப்புத் துறையில் உள்ள பல்வேறு அம்சங்கள், அதன் தொடர்பிலான வாழ்க்கைத் தொழில் தெரிவுகள் போன்றவற்றை, தொழில் துறையினருடன் நடத்தப்படும் ஈடுபாட்டு நிகழ்வுகளின் வழி தெரிந்து கொள்வார்கள்.
நேற்று நடைபெற்ற முதலாவது சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு கல்விக் கருத்தரங்கில் தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி இந்த விவரங்களை வெளியிட்டார்.
இதுவரை இந்த இரண்டு நாள் நிகழ்வுக்கு சுமார் 500 கல்வியாளர்கள் பதிந்துகொண்டுள்ளனர். சிஎஸ்ஏ அமைப்பு மெய்நிகர் வழியாக ஏற்பாடு செய்துள்ள முதலாவது ஈடுபாட்டு நிகழ்ச்சி இது.
“வாழ்க்கைத் தொழில் தொடர்பான விருப்பங்கள் சிக்கலானவை. அது இளையர்களிடமே அதிக குழப்பத்தை ஏற்படுத்தும். கல்வியாளர்களாகிய நீங்கள் கூறும் ஆலோசனை முக்கிய பங்காற்றி, இளம் வயதினர் மேம்பட்ட முடிவுகளை எடுக்க உறுதுணையாக இருக்கும்.
“வேகமாக மாறி வரும் இத்துறையில் இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகப்படுத்த உங்களைப் போன்ற கல்வியாளர்களின் உதவி தேவைப்படுகிறது.
“உங்கள் முயற்சியால், அடுத்த தலைமுறையினர் தங்களுக்கு விருப்பமான துறைகளில் பிரகாசிக்க நீங்கள் உதவ முடியும் என்று நம்புகிறோம்,” என்று அமைச்சர் விவரித்தார்.
இத்திட்டத்தின் மூலம், பள்ளித் தலைவர்களும் கல்வியாளர்களும் சிஸ்கோ நிறுவனம், கெஸ்பர்ஸ்கி செக்கியோரிட்டி நிறுவனம், சிங்கப்பூர் கணினிச் சங்கம் போன்ற பங்காளித்துவ அமைப்புகள் நடத்தும் தகவல் பகிர்வு வகுப்புகளில் சேர்ந்து பயில்வதுடன் சிஎஸ்ஏ அமைப்பு ஏற்பாடு செய்யும் பணிமனைச் சுற்றுலாக்களுக்குச் சென்று அங்கு மேற்கொள்ளப்படும் வெவ்வேறு வகையான இணையப் பாதுகாப்பு அம்சங்களைக் கற்றுக்கொள்வார்கள்.
இணையப் பாதுகாப்புத் துறையில், இணையப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான வடிவமைப்பாளர்கள், இணைய ஊடுருவலைத் தடுக்கும் நிபுணர்கள் வரை வெவ்வேறு வகையான, நல்ல ஊதியம் வழங்கக்கூடிய வாழ்க்கைத் தொழில் பாதைகள் உள்ளன என்பதையும் அமைச்சர் டாக்டர் ஜனில் சுட்டினார்.