பசிபிக் பங்காளித்துவ நாடுகளின் முழுமையான முற்போக்கு வர்த்தக உடன்பாட்டில் (CPTPP) அமெரிக்கா சேர்ந்து தன்னுடைய வர்த்தகக் கதவுகளை அகல திறந்துவிட விரும்புமா என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை என பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்க இருக்கும் பைடன், உலக வர்த்தகத்திற்கு ஆதரவாக பலதரப்பு ஏற்பாட்டு ஆதரவாளர்களை அதிகமாக கொண்டிருக்கக்கூடும் என்றாலும் அமெரிக்காவின் நிலையில் இன்னமும் தெளிவில்லை என்றார் திரு லீ.
அமெரிக்காவின் இப்போதைய அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் போக்கு பற்றி கருத்துரைத்த திரு லீ, அது சாதகம், பாதகம் என்ற வர்த்தக விகிதாச்சார அடிப்படையில் செயல்பட்டு வந்திருப்பதாகக் கூறினார்.
"உங்களுடன் நடக்கும் வர்த்தகத்தில் எனக்கு உபரி இருந்தால் எனக்கு நல்லது. வர்த்தகப் பற்றாக்குறை என்றால் எனக்கு கெட்டது என்ற அணுகுமுறையையே அந்த நிர்வாகம் இதுவரை கடைப்பிடித்து வந்ததாகத் தெரிகிறது," என்று திரு லீ கூறினார்.
ஆனால் வர்த்தகம் என்பது இப்படிப்பட்டது அல்ல என்று திரு லீ கருத்துரைத்தார். ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு அமைப்புடன் (ஏபெக்) கூடிய மெய்நிகர் சந்திப்பு ஒன்றில் திரு லீ உரையாற்றினார்.
"வர்த்தகம் என்பது யாருக்கும் பாதிப்பு இல்லாமல் வெற்றியை ஏற்படுத்தித் தருவதாகும். உங்களுடனான வர்த்தகத்தில் எனக்கு உபரி ஏற்பட்டு இருக்கலாம். வேறு ஒருவருடனான வர்த்தகத்தில் எனக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கலாம்.
"இருந்தாலும் மொத்தத்தில் சமநிலை ஏற்படும் பட்சத்தில் பாதிப்பு ஒரு பொருட்டே அல்ல," என்று திரு லீ கூறினார்.
ஆனால் ஜனவரி 20 வரையில் பதவி வகிக்கப்போகும் அதிபர் டிரம்ப்பின் நிர்வாகத்தின் கருத்து வேறுபட்டதாக இருந்து வந்திருக்கிறது என்பதை திரு லீ சுட்டினார்.
அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பைடன் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்பார்.
டிரம்ப் நிர்வாகம் தனது பதவி காலத்திற்குள் தங்கள் நிலையை மாற்றும் என்று தான் கருதவில்லை என்றும் திரு பைடனின் புதிய நிர்வாகம் இதன் தொடர்பில் எப்படி செயல்படுகிறது என்பதை நாம் காணவேண்டி இருக்கிறது என்றும் திரு லீ குறிப்பிட்டார்.
ஏபெக் அமைப்பின் அந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தியவரும் சிங்கப்பூர் தொழில்துறை சம்மேளனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹோ மெங் கிட் முன்வைத்த கேள்விக்குப் பதிலளித்து திரு லீ பேசினார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு ஏபெக்கை எப்படி பாதிக்கும் என்றும் உலகின் ஆகப் பெரிய வர்த்தக உடன்பாடான முழுமை யான வட்டார பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாட்டில் (RCEP) அமெரிக்கா கையெழுத்திடுமா என்றும் திரு ஹோ கேட்டிருந்தார்.
இந்த இரண்டு உடன்பாடுகளும் ஆசிய பசிபிக் வட்டாரத்தைத் தழுவிய தாராள வர்த்தக இலக்கு ஒன்றின் முக்கிய அடிப்படை அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன.
ஆசிய பசிபிக் தாராள வர்த்தக வட்டாரம் (FTAAP) என்று இந்த இலக்கு குறிப்பிடப்படுகிறது. இது பற்றி ஏபெக் உறுப்பு நாடுகள் 2004 முதல் பேசி வருகின்றன.
ஏபெக் அமைப்பில் இந்த இலக்கு தொடர்பில் முன்னேற்றம் மெதுவாகத்தான் ஏற்பட்டு வருகிறது. இதற்கு என்ன காரணம் என்பது பற்றி கருத்து கூறிய திரு லீ, அமெரிக்கா வர்த்தகப் பிரச்சினைகளை, ஓர் அமைப்பில் அங்கம் வகிக்கும் பல தரப்பு பங்காளிகளையும் உள்ளடக்கி அதன் அடிப்படையில் பேசி தீர்த்துக்கொள்வதற்குப் பதிலாக இரு தரப்பு அடிப்படையில் கையாளவே விரும்புகிறது என்று தெரிவித்தார்.
அதேநேரத்தில், பைடனின் நிர்வாகம் உலக வர்த்தக நிறுவனத்திற்கும் ஏபெக்கிற்கும் அதிகமான ஆதரவுடன் நடந்துகொள்ளக்கூடும் என்றாலும் இது அமெரிக்க உள்நாட்டு அரசியலைப் பெரிதும் சார்ந்திருக்கும் என்றார் திரு லீ.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கையெழுத்திடப்பட்ட முழுமையான வட்டார பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாடு (RCEP) பற்றி கருத்துரைத்த திரு லீ, அது ஒரு பெரும் முன்னேற்றம் என்று வர்ணித்தார்.
இந்த உடன்பாடு தொடர்பான பேச்சில் இருந்து சென்ற ஆண்டு இந்தியா விலகிவிட்டது. இது ஏமாற்றம் அளிப்பதாகத் தெரிவித்த திரு லீ, ஒரு நாள் இந்த உடன்பாட்டில் இந்தியா சேரும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
இந்த உடன்பாட்டில் இருந்து ஏன் இந்தியா விலகி இருக்கிறது என்பதைத் தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்றும் ஆனாலும் நீண்டகாலப் போக்கில் இந்த உடன்பாடு இந்தியாவுக்கு பொருளியல் ரீதியில் நன்மை பயக்கும் என்றும் திரு லீ கருத்துரைத்தார்.

