தென் கொரியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து இந்த மாதம் இங்கு வந்த எட்டு பயணிகள் வீட்டிலேயே தங்கி இருந்தது பற்றி பொய்யான தகவல்களைத் தெரிவித்தது தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
அவர்களில் நான்கு பேர் வெளிநாட்டினர். குற்றவாளிகள் என தெரியவந்தால் அவர்களின் நிரந்தரவாச உரிமை பறிபோகலாம். அதுவும் வேலை அனுமதிகளும் புதுப்பிக்கப்படாமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது.
குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையமும் போலிசும் அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்தன. நான்கு சிங்கப்பூரர்கள், இரண்டு நிரந்தரவாசிகள், இரண்டு நீண்ட கால அனுமதி அட்டைதார்கள் ஆகியோர் அடங்கிய அந்த எட்டு பேரும், குறிப்பிட்ட இடங்களில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
ஆனால் இதைத் தவிர்க்கும் வகையில் அவர்கள் பொய்த்தகவல்களைத் தெரிவித்தனர் என்று அந்த அமைப்புகள் குறிப்பிட்டு உள்ளன.
அவர்கள் நவம்பர் 5ஆம் தேதிக்கும் நவம்பர் 12ஆம் தேதிக்கும் இடையில் இங்கு வந்தனர்.
குறிப்பிட்ட இடங்களில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வதற்குப் பதிலாக தங்களின் தங்கு மிடங்களிலேயே தனித்து இருக்க தங்களை அனுமதிக்கும்படி அவர்கள் கேட்டு இருந்தனர்.
தங்குமிடத்தில் தாங்கள் மட்டும் தனித்து இருக்கப்போவதாக அல்லது தங்களைப் போல் அதே பயணங்களை மேற்கொண்ட, அதே காலத்துக்குத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள குடும்பத்தினர்களுடன் தங்கப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அதிகாரிகள், நவம்பர் 6ஆம் தேதிக்கும் 13ஆம் தேதிக்கும் இடையில் அவர்கள் தங்குமிடங்களில் சோதனையிட்டனர்.
தனிமை உத்தரவு பிறப்பிக்கப்படாத குடும்ப உறுப்பினர்களுடன் அவர்கள் தங்கி இருந்ததை அதிகாரிகள் கண்டனர். அதனை அடுத்து அவர்கள் எட்டு பேரும் குறிப்பிட்ட தனிமை இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு தனித்து வைக்கப்பட்டனர்.
இப்போது அந்த எட்டு பேரையும் போலிஸ் விசாரித்து வருகிறது. வழக்குத் தொடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சியாக அந்த எட்டு பேருடன் சேர்ந்து தங்கி இருந்த குடும்ப உறுப்பினர்கள் தனிமையில் இருக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஃபிஜி, ஜப்பான், தென் கொரியா, இலங்கை, தாய்லாந்து, துருக்கி நாடுகளில் இருந்து வருவோர், சில நிபந்தனைகளுடன், தனிமை இடங்களுக்குப் பதிலாக பொருத்தமான தங்கள் இருப்பிடங்களில் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.

