விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் செயல்பாடுகள் அனைத்தையும் ஒரே இடத்தில் இடம்பெறச் செய்யும் வகையில் சிலேத்தாரில் $38 மில்லியன் செலவில் கட்டப்பட்ட ஒரு வளாகம் நேற்று அதிகார பூர்வமாகத் திறக்கப்பட்டது.
கொவிட்-19 காரணமாக உலகளாவிய விமானப் போக்குவரத்து துறையும் ஆகாய தொழில் துறையும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.
பராமரிப்புச் சேவைகளும் விமானத் தயாரிப்பும் 40% குறைந்துவிட்டன. பயணிகளின் எண்ணிக்கை 66 விழுக்காடு படுத்துவிட்டது. இந்த நிலையில் ஏர்பஸ் நிறுவனம் ஒரே இடத்தில் தன்னுடைய செயல்பாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கிறது.
புதிய வளாகம் 51,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இது ஏழு காற்பந்துத் திடல்களைவிட பரப்பளவில் கொஞ்சம் அதிகமானது.
சிங்கப்பூரில் ஏர்பஸ் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு இது அடையாளமாகத் திகழ்வதாக வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் நேற்று வளாகத்தின் அதிகாரபூர்வ திறப்புவிழாவில் தெரிவித்தார்.
“கொவிட்-19க்கு முன்பு இது இடம்பெற்றிருந்தால் இங்கு விமானப் போக்குவரத்துத் துறையில் இடம்பெறக்கூடிய மற்றொரு முதலீடாக இதை நாம் கருதுவோம்.
“விமானத் தொழில்துறை வளர்ந்து வருவது பற்றி இப்போதைய சூழ்நிலையில் நினைத்து பார்ப்பவர்கள் வெகு சிலரே. இந்தச் சூழலில் இந்த வளாகம் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது,” என்று அமைச்சர் கூறினார்.
ஐரோப்பாவை சேர்ந்த ஏர்பஸ் நிறுவனத்தில் சிங்கப்பூரில் ஏறக்குறைய 800 பேர் வேலை பார்க்கிறார்கள். உலகம் முழுவதும் இந்த நிறுவனத்தில் 130,000க்கும் அதிக ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.
ஏர்பஸ் நிறுவனம் சுமார் 50 ஆண்டு காலமாக சிங்கப்பூரில் செயல்பட்டு வருகிறது. 1969ல் சிங்கப்பூர் விமானப் படைக்கு அது முதன்முதலாக நான்கு ஹெலிகாப்டர்களை விற்றது.
அது முதல் சிங்கப்பூரில் ஆகாயத் தொழில்துறையைச் சேர்ந்த நிறுவனங்களுடன் ஏர்பஸ் அணுக்கமாகச் செயல்பட்டு வருகிறது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் கூட்டாக முதலீடு செய்து விமானிகளுக்கு அது பயிற்சி அளிக்கிறது. ஆய்வுகளிலும் ஈடுபட்டு வருகிறது.