சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சாங்கி பயிற்சி நிலையத்தை சுற்றிப் பார்த்து நேரடி அனுபவத்தைமக்கள் பெறுவதற்கு வகை செய்யும் முதலாவது சுற்றுலா இன்று காலை தொடங்கியது.
அதில் 500 பேர் கலந்துகொண்டு அந்த நிறுவனத்தின் பல்வேறு அதிநவீன பயிற்சி ஏற்பாடுகளை நேரடியாக பார்த்து பலவற்றையும் தெரிந்துகொண்டனர்.
அந்தச் சுற்றுலாவின் ஒரு பகுதியாக ‘இளம் விமான ஊழியர்கள் அனுபவம்’ என்ற ஒரு திட்டமும் இடம் பெற்றது.
அதில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் விமானச் சிப்பந்தி உடையை அணிந்து விமானத்தின் உள்ளே பயணிகளை உபசரிப்பது போன்ற அனுபவத்தைப் பெற்றனர்.
இந்தச் சுற்றுலாவில் கலந்துகொள்ள 12 வயது மற்றும் அதற்கும் அதிக வயதுள்ளோருக்கு ஜிஎஸ்டி வரி சேராமல் $30 கட்டணம்.
3 முதல் 12 வரை வயதுள்ள சிறார்களுக்கு $15 கட்டணம்.
இளம் விமான ஊழியர் அனுபவத்தை நேரடியாகப் பெற வேண்டுமானால் அதற்குரிய கட்டணம் $88.
இந்தக் கட்டணத்தைச் செலுத்தினால் எஸ்ஐஏ நிறுவனத்திற்கே உரிய சிறப்பு உடையில் மிளிரலாம்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று, நாளை, 28, 29 ஆகிய தேதிகளிலும் இந்தச் சுற்றுலாவை நடத்துகிறது.
ஒவ்வொன்றிலும் கூடினபட்சமாக 500 பேர் கலந்துகொள்ளலாம்.
இந்தச் சுற்றுலாவில் கலந்துகொள்ள 20,000 பேருக்கும் அதிக மக்கள் ஆர்வம் காட்டியதாக எஸ்ஐஏ தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் போங் கூறினார். ஆதரவு அதிகம் இருந்தாலும் மேற்கொண்டும் இத்தகைய சுற்றுலாவை நடத்தும் திட்டம் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே, குறுகிய தூரம் பறந்து செல்லக்கூடிய தனது விமானங்களில் கட்டணம் குறைந்த வகுப்புகளில் பயணம் செய்யும் பயணிகளுக்காக புதிய வகை உணவையும் திரவ உணவை உண்பதற்குத் தோதாக பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட பாத்திரங்களுக்குப் பதிலாக புதிய வகை பாத்திரங்களையும் எஸ்ஐஏ நேற்று அறிமுகப்படுத்தியது.
இந்தப் புதிய வகை பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் பல நன்மைகள் இருப்பதாகவும் விமானங்களில் எரிபொருளை மிச்சப் படுத்த இவை உதவும் என்றும் எஸ்ஐஏ தெரிவித்து உள்ளது.