சைக்கிளோட்டிகளும் நடைப்பயணம் மேற்கொள்பவர்களும் இனி 1.76 கிலோ மீட்டர் நீளமுடைய லோர்னி இயற்கைப் பாதையைப் பயன்படுத்தலாம். 'ஜூரோங் லேக்' தோட்டத்தில் தொடங்கிய கோனி தீவுப் பூங்கா வரை செல்லும் 'கோஸ்ட் டு கோஸ்ட்' பாதையில் இந்தப் புதிய பகுதி இடம்பெறுகிறது.
நேற்று திறக்கப்பட்ட லோர்னி இயற்கைப் பாதை, மேக்ரிட்சி நீர்த்தேக்கப் பூங்காவுக்கும் ஆடம் ரோட்டிற்கும் இடையிலான பசுமைப் பாதையாகத் திகழ்கிறது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, சமூகத்துடன் சேர்ந்து அந்தப் பாதையில் 150 மரங்களை நட்டார்.
'ஒரு மில்லியன் மரங்கள்' இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் அமைகிறது. இவ்வாண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்ட அந்த இயக்கத்தின்கீழ் இதுவரை 80,000க்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளன. 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு மில்லியன் மரங்களை நட அந்த இயக்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது. சிங்கப்பூரில் தற்போது ஏறத்தாழ ஏழு மில்லியன் மரங்கள் உள்ளன.
"அடுத்த 10 ஆண்டுகளில் சிங்கப்பூரை இயற்கை எழில் கொஞ்சும் நகரமாக உருமாற்றும் நமது கடப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த முயற்சிகள் அமைகின்றன. நகரமயமாக்கலாலும் பருவநிலை மாற்றத்தாலும் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க இது உதவும்.
"மேலும், சிங்கப்பூரர்கள் இயற்கை வசதிகளைப் பயன்படுத்தவும் வாழ்வதற்குரிய ஒரு சுற்றுச்சூழலை உருவாக்கவும் இந்த முயற்சி கைகொடுக்கும்," என்றார் அமைச்சர் லீ.
கியம் ஹோக் ரோடு முதல் அப்பர் தாம்சன் ரோடு வரை செல்லும் 10 கிலோ மீட்டர் பாதையின் ஒரு பகுதியாகவும் லோர்னி இயற்கைப் பாதை அமைகிறது.
லோர்னி நெடுஞ்சாலை கட்டப்பட்ட பிறகு, ஏழு தடங்களைக் கொண்டிருந்த லோர்னி சாலையை நான்கு தடங்களாகக் குறைத்து, அதன் மூலம் மிச்சப்படுத்தப்பட்ட இடத்தில் லோர்னி இயற்கைப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
எனினும், லோர்னி நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகளால் புக்கிட் பிரௌன் இடுகாட்டின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டதை திரு லீ சுட்டினார்.
"போக்குவரத்துக் கட்டமைப்புகளை மேம்படுத்தும்போதும் நமது மரபுடைமை மற்றும் உயிரினப் பன்மயத்தை விட்டுக்கொடுப்பதில் நாங்கள் போராட வேண்டியிருந்தது. எனினும், அரசாங்கத்திற்கும் இயற்கை, மரபுடைமைக் குழுக்களுக்கும் இடையே கலந்துரையாடல்களை நடத்தியதன் மூலம் இந்தச் சிரமமான விவகாரங்களுக்குத் தீர்வு கண்டோம்," என்றார் அவர்.

