புக்கிட் பாஞ்சாங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு, திருமதி கௌசல்யா ராமச்சந்திரா தலைமையில் ஏற்பாடு செய்த தீபாவளி நிகழ்ச்சி இந்த ஆண்டு மெய்நிகர் வழியாக இம்மாதம் 8ஆம் தேதி நடைபெற்றது.
புக்கிட் பாஞ்சாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு லியாங் எங் ஹூவா குத்துவிளக்கேற்றி தீபாவளி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
அந்தக் கொண்டாட்டத்தில் கொவிட்-19 சூழலின் விதிமுறைகளின்படி புக்கிட் பாஞ்சாங் சமூக மன்ற அரங்கில் குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களும் தொண்டூழியர்களும் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாண்டு தீபாவளிக் கொண்டாட்டத்தில் கண்ணாடியில் ஓவியம், மறுபயனீட்டுப் பொருட்களைக்கொண்டு புத்தாக்க முறையிலான ரங்கோலி கோலம், கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இந்தியப் பாரம்பரிய உடைகளில் அழகிகள் பவனி வந்தனர்.
நிகழ்ச்சியை நேரில் காண முடியாவிட்டாலும் இணையம் வழி பலரும் கண்டு மகிழ்ந்தனர்.
புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் வசதி குறைந்த குடும்பங்களுக்குத் தீபாவளி அன்பளிப்பாகப் பலகாரங்கள், டி-சட்டை, பொருள்கள் அடங்கிய பைகளுடன் பண உதவியும் வழங்கப்பட்டது.
கொவிட்-19 சூழலில் பல வகையில் பாதிப்பு ஏற்பட்டாலும், இவ்வட்டார மக்களின் பண்டிகை கால மகிழ்ச்சியை இந்த நற்செயல்கள் அதிகரித்துள்ளது என்பதில் ஐயம் இல்லை.