தேசிய பூங்கா வாரியம், ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் புதிய நாய் பூங்காவைத் திறந்துள்ளது. அதுவே நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஆகப் பெரிய நாய் பூங்கா ஆகும்.
அதோடு, பறவைகள் இளைப்பாறும் இடம் ஒன்றையும் அந்தப் பூங்காவில் வாரியம் நேற்று திறந்தது. இவை இரண்டும் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் வளர்ப்புப் பிராணிகளுக்கு ஏற்ற வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டு உள்ளன.
இவற்றோடு இந்தப் பூங்காவிற்காக, ஈஸ்ட் கோஸ்ட் பார்க் தோழமைச் சமூகம் என்ற ஒரு புதிய அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இது அந்த வட்டாரத்தைச் சேர்ந்த பன்மய சமூகத்தைப் பிரதிபலிக்கிறது.
இந்தப் புதிய அமைப்பின் மூலம் இந்தப் பூங்காவை நிர்வகிப்பதில் சமூகம் மேலும் மும்முரமாக பணியாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை நகர் என்ற சிங்கப்பூரின் இலக்கையொட்டியும் இது இடம்பெறுகிறது. இந்த இலக்கில் சமூகத்துக்கு முக்கிய இடம் உண்டு.
ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் நாய் பூங்கா, பறவை உறைவிடம் ஆகிய புதிய ஏற்பாடுகள் திறக்கப்பட்டதை ஒட்டி நேற்று அங்கு சமூக மரம் நடும் நிகழ்ச்சி நடந்தது.
தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் அதில் கலந்துகொண்டார். அவருடன் சேர்ந்து ஈஸ்ட் கோஸ்ட் பார்க் தோழரும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறை விரிவுரையாளருமான என் சிவ சோதியும் மரம் நட்டார்.

