வாட்ஸ்அப், இன்ஸ்டகிராம், டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்களில் ‘ஆர்ட்டிஃபார்ட்டிபிருன்’ வடிவமைத்த தமிழ் சித்திர ஒட்டுவில்லைகளை நாம் பயன்படுத்தி இருப்போம். இது பகுதி நேரமாக சித்திரங்கள் வரைந்து வரும் பிருந்தாவின் கலைப் படைப்பு.
தனது படைப்புகளின் வழி தமிழ் கலாசாரத்தைப் பிரதிநிதிப்பது மட்டுமின்றி இளையர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக ஊடகங்களில் தமிழ்ப் புழக்கத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு படைப்புகளை உருவாக்கி வருகிறார் சித்திரக் கலைஞர் பிருந்தா.
சித்திரக் கலைஞர் என்பதையும் தாண்டி, தமிழ் சித்திரப் படைப்புகள் எவ்வாறு தமிழ் இலக்கியப் படைப்புகளுக்கு கைகொடுக்கலாம், ஒரு சுவாரசியமான இலக்கிய அனு பவத்தை உருவாக்க தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் தமிழ் சித்திர வடிவமைப்பாளர்கள் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படலாம் என்பதை பற்றி இம்மாதம் 5ஆம் தேதி சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவை முன்னிட்டு நடைபெற்ற ‘சித்திரத் தமிழ்’ என்ற உரையாடல் நிகழ்ச்சியில் குமாரி பிருந்தா விளக்கி இருந்தார். இணையம்வழி நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு தேசிய கலைகள் மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.
பிருந்தாவோடு வரைகதை கலைஞர் ராம் பிரசாத், சுவரோவியக் கலைஞர் இவ்லின் சோனியா ராயன், உயிரோவியக் கலைஞரும் குறும்படத் தயாரிப்பாளருமான ஜெகநாத் ராமானுஜம் ஆகிய சித்திர ஓவியர்கள் இந்த உரையாடலில் கலந்துகொண்டு தமிழ் சித்திரங்களைப் பற்றிய தங்களது கருத்துகளையும் சிந்தனைகளையும் பகிர்ந்துகொண்டனர். இந்த உரையாடலின் நெறியாளராக குமாரி ஆயிலிஷா மந்திரா பங்கேற்றார்.
கலை ஆர்வத்தை வெளிப்படுத்தவும் தமிழ்ப் பண்பாடு பற்றிய மீள்பார்வைகளை முன்வைக்கவும் சித்திரம், உயிரோவியம் இரண்டையும் கையில் எடுத்துள்ளனர் இந்த இளம் கலைஞர்கள். அவர்களது படைப்புகள் பொதுவெளியில் கவனத்தை ஈர்த்துள்ளபோதும், இலக்கிய வெளிக்குள் அவர்கள் இன்னமும் கால் பதிக்கவில்லை.
மேலும், சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தில் சித்திரப் படைப்புகள் அளிக்கக்கூடிய புதிய வாய்ப்புகள் பற்றியும் இங்கு சித்திரப்பட நாவல் உருவாகும் சாத்தியம் பற்றியும் அவர்கள் உரையாடினர். தமிழிலும் ஆங்கிலத்திலும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆங்கில விளக்க வரிகள் சேர்க்கப்பட்டன.
“சித்திர விளக்கப்படங்கள் மற்றும் ‘கிராஃபிக்ஸ்’ போன்றவற்றை இன்றுவரை தமிழ் இலக்கியப் படைப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை என்பதைப் பற்றி உரையாடியது மிக சுவாரசியமான ஒன்றாக இருந்தது. இந்த நிகழ்ச்சியின் வழி என்னைவிட மிகவும் வித்தியாசமான சித்திர ஓவிய பாணிகளைக் கொண்ட சக கலை ஆர்வலர்களைச் சந்தித்தேன்,” என்று தெரிவித்தார் பிருந்தா.
உரையாடலில் பங்கேற்ற வரைகதை கலைஞர் ராம் பிரசாத், தாம் உருவாக்கிய ஒரு தமிழ் வரைக்கதை (Comic Book) புத்தகத்தை ‘தமிழா’ என்ற இளையர் குழுவுடன் இணைந்து விரைவில் வெளியிடவுள்ளதாக கூறினார்.
இந்த வரைகதை புத்தகம் தமிழில் பேசுவதைப் பற்றியது. தமிழில் சரளமாக பேச முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் தமிழில் பேச முயற்சி செய்ய வேண்டும் என்னும் கருத்தைக் கொண்டுள்ளது இந்த வரைக்கதை.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மாணவரான ராம் பிரசாத், சித்திரக்கலை மீது உள்ள ஆர்வத்தால் அதனைப் பள்ளிப் பாடமாக பயின்றார். அந்த ஆர்வத்தால், கொவிட்-19 கிருமி பரவல் காலத்தில் வீட்டிலிருந்தபோது வரைகதைப் படைப்புகளை அவர் உருவாக்கத் தொடங்கினார். தனது படைப்புகளின் வழி நவீன கலை வடிவமான வரைகதையையும் தமிழின் செறிவுமிக்கப் பண்பாட்டுக் கூறுகளையும் இணைக்க ராம் முற்படுகிறார்.
மேற்கத்திய உலகில், குறிப்பாக இலக்கிய சூழலில் சித்திர ஓவியங்களின் பங்கு அதிகம் உள்ளது என்பதோடு அங்கு அதன் பயன்பாடும் அதிகரித்துள்ளது.
இந்தப் போக்கு சிங்கப்பூர் இலக்கிய சூழலில் இல்லை என்னும் கருத்தையும் கலைஞர்கள் முன்வைத்தனர்.