இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து கடற்படைகளுக்கு இடையிலான இரு நாள் பயிற்சி நேற்றும் நேற்று முன்தினமும் நடைபெற்றன. சிட்மெக்ஸ்-20 என அழைக்கப்படும் இப்பயிற்சி, அந்தமான் கடற்பகுதியில் சனிக்கிழமை தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கடற்பகுதியில் மட்டுமே இப்பயிற்சிகள் நடைபெற்றன.
இந்திய கடற்படைக்குச் சொந்தமான கமோர்டா மற்றும் ஏவுகணை தாங்கிக் கப்பலான கர்முக் ஆகியவை பயிற்சியில் முக்கிய பங்கு வகித்தன. இவை நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை.
மூன்று நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே பரஸ்பர தன்னம்பிக்கையை வலுப்படுத்தவும் பொதுவான புரிதலை வளர்க்கவும் கடல் பாதுகாப்பை மேம்படுத்தத் தேவையான சிறந்த வழிமுறைகளைப் பின்பற்றவும் இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது. இந்த வருடப் பயிற்சியை சிங்கப்பூர் கடற்படை தலைமை ஏற்று நடத்துகிறது.