குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி ஆடவர் ஒருவரைப் பலமுறை அடித்துத் துன்புறுத்தியதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரியான 33 வயது வெங்கடேஷ் ராஜ் நைனார் நாகராஜன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமக்கு எதிராகப் பதிவாகியுள்ள இந்தக் குற்றச்சாட்டை வெங்கடேஷ் மறுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பான முதல் வழக்கு விசாரணை இன்று தொடங்கியது.
2017ஆம் ஆண்டில் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் போதைப்பொருளுடன் மலேசியரான சிவபாலன் கன்னியப்பன் சிக்கினார். அதனைத் தொடர்ந்து குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி சிவபாலனை வெங்கடேஷ் அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனை முன்னிட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதியிலிருந்து வெங்கடேஷ் தமது வேலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2017ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி சிஎன்பி புளோக் ‘பி’ அலுவலகத்தில் உள்ள கழிவறைக்கு சிவபாலனை வெங்கடேஷ் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்க அவரை அங்கு அழைத்துச் சென்றதாக நம்பப்படுகிறது.
வெங்கடேஷுக்கு எதிராக மூன்று போலிஸ் அதிகாரிகள் சாட்சியம் அளித்தனர். அவர்களில் ஒருவர் வெங்டேஷுக்கு எதிராக புகார் செய்தார். மற்ற இருவர் அவரிடம் விசாரணை நடத்தியவர்கள். மேலும் 15 பேரிடமிருந்து சாட்சியம் பெற அரசு வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர்.
கண்காணிப்பு கேமரா பதிவுகள், புகைப்படங்கள், சிஎன்பி உட்லண்ட்ஸ் அலுவலகத்தின் வரைபடம் ஆகியவற்றுடன் வெங்கடேஷின் வாக்குமூலத்தையும் ஆதாரங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொரு குற்றச்சாட்டின் பேரில் வெங்கடேஷுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறையுடன் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம். வழக்கு விசாரணை நாளை தொடர்கிறது.
இதற்கிடையே, சிவபாலனுக்கு எதிரான போதைப்பொருள் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகவும் அவர் 15 ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு 13 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.