கொவிட்-19 தொடர்பான பாதிப்புகளை எதிர்கொள்வதில் உலக நாடுகள் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருந்தாலும், எதிர்காலத்தின் மீது கவனம் செலுத்துவதும் முக்கியம் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவின் தலைமையில் நடைபெற்ற ஜி-20 மெய்நிகர் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்க சிறப்பு அழைப்பு பெற்றிருந்த சிங்கப்பூர் சார்பில் திரு லீ நேற்று முன்தினம் பேசினார். அதில் எதிர்காலத்தின் மீது கவனம் செலுத்துவதில் இரண்டு அணுகுமுறைகளை திரு லீ பரிந்துரைத்தார்.
“ஒன்று, சமூக பின்னடைவை வலுப்படுத்துவது. கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு முன் பல நாடுகள் தன்னைப்பேணித்தன உணர்வுகளால் கடுமையான மன அழுத்தத்தை எதிர்நோக்கியிருந்தன. தனித்து விடப்பட்ட இந்த நாடுகளின் பிரச்சினைகள் இன்னும் பெரிதாகும். இதற்குத் தீர்வு காண, மக்களுக்கு நல்ல வேலைகளை உருவாக்கி, அவற்றைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.
“கல்வி, பொது வீடமைப்பு, பொதுச் சுகாதாரம், சமூக பாதுகாப்பு வலையைப் பலப்படுத்துதல் போன்றவற்றுக்கு அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் விளையும் வெற்றிக் கனிகளை வசதி குறைந்தவர்களும் சுவைக்க முடியும். இதன் காரணமாகத்தான் சம்பளம், மறுதிறன் பயிற்சி, பாலர் கல்வித் துறை, பொது மருத்துவமனைகள், பராமரிப்பு வசதிகள் போன்றவற்றில் சிங்கப்பூர் முதலீடு செய்துள்ளது,” என்று விவரித்தார்.
“இரண்டாவது அணுகுமுறை, பொருளியல் இடையூறுகளால் துவண்டு விடாமல், நிலைத்தன்மையுடைய எதிர்காலத்துக்கான முயிற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும். பருவ நிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் சிங்கப்பூர் கடப்பாடு கொண்டுள்ளது. ஆனால் சிறிய நாடாகிய சிங்கப்பூரால் அதை தனியாகச் செய்ய முடியாது. மற்ற நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் தான் அது சாத்தியமாகும்.
“ஆக, சிறிய, பெரிய நாடுகள் பருவநிலை மாற்றத்துக் கான பாரிஸ் உடன்பாட்டில் பங்கேற்று, அதன் மூலம் தங்கள் கடப்பாட்டை வெளிப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த முயற்சியை ஜி-20 அமைப்பு முன் னெடுத்து செல்லும் என்பதும் சிங்கப்பூரின் வலுவான நம்பிக்கை,” என்றும் பிரதமர் லீ தமது உரையில் கூறினார்.