கொவிட்-19 நெருக்கடியால் சுற்றுலாத்துறை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தத் துறையை நம்பியிருந்த ஹோட்டல்கள், உணவகங்கள், கடைகள், உல்லாசத் தளங்கள் போன்ற தொழில்துறை மீண்டும் தலையெடுக்கும் வகையில் சிங்கப்பூரர்களுக்கு ‘சுற்றுலா ஊக்கத்தொகை’ என்ற வடிவில் நூறு வெள்ளி மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் அடுத்த மாதம் 1ஆம் தேதி வழங்கப்படவிருக்கின்றன.
இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இருப்பினும், அதன் பயன்பாட்டு நடைமுறை சிரமமாக உள்ளதாக பயனாளர்கள் சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் மாதம் 1ஆம் தேதியிலிருந்து 18 வயது அதற்கு மேற்பட்டவர்களுக்கும் ‘சிங்கப்பூர் ரீடிஸ்கவர்ஸ்’ பற்றுச்சீட்டு வழங்கப்படவுள்ளது. அதை உள்ளூர் உல்லாச இடங்கள், உள்ளூர் சுற்றுலா மற்றும் ஹோட்டல் ஆகியவற்றுக்குப் பயன் படுத்திக்கொள்ளலாம்.
இந்நிலையில், இந்தத் திட்டத்திற்கு சிங்கப்பூரர்கள் பலரிடம் இருந்து வரவேற்பு கிடைத்தாலும் சிலர் அது பயன்படுத்தும் விதம் மிகவும் எளிதாக இல்லை என தெரிவித்துள்ளனர்.
முக்கியமாக அந்தப் பற்றுச்சீட்டை பயன்படுத்துவதற்கான நடைமுறை மிகவும் சிக்கலாக உள்ளது என்றும் அதனால் அந்தப் பற்றுச்சீட்டைப் பயன்படுத்த சிலர் தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக மூத்த குடிமக்களில் பெரும்பாலானோர் இந்தப் பற்றுச்சீட்டைப் பயன்படுத்த தயங்குகின்றனர் என்று கூறப்படுகிறது.
$10 மதிப்பில் கிடைக்கும் இந்தப் பற்றுச்சீட்டுகளை குளோபல்டிக்ஸ், க்லூக் & யூஓபி டிராவெல் பிளேனர்ஸ், டிராவலொக்கியா மற்றும் டிரிப் டாட் காம் ஆகிய நிறுவனங்களில் இணையச் சேவை மூலம் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த யோசனைக்கு பயனாளர்களிடம் வரவேற்பு இருந்தாலும் இதை நடைமுறைப்படுத்தும் முறை சிக்கலாகவுள்ளது என்ற குறைகூறல்களும் எழுந்துள்ளன.
இந்தப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்துவதற்குப் ஒரு பொதுவான இணையத் தளம் இருந்தால் நல்லது என்கின்றனர் பயனாளர்கள்.
பயனாளர்களைப் போலவே சிறிய வர்த்தகர்களும் சுற்றுலாத்துறையின் ஒரே இணையத் தளம் மூலம் இந்த பற்றுச்சீட்டு பயன்பாடு இருந்தால் மக்கள் அவற்றை எளிதாகப் பயன்படுத்த முடியும் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அதுபோல அந்த இணையத் தளத்தில், எந்தெந்த வழிகளில் இதைப் பயன்படுத்தலாம் என்ற விவரங்களைத் தேடிப்பெறும் வகையில் மையப்படுத்தப்பட்ட தேடி அறியும் கருவியும் அது தொடர்பான இணையத் தளங்களின் முகவரிகளும் இடம்பெறவேண்டும் என்று பல்கலைக் கழக மாணவி லின் கோ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்துள்ளார்.
“உள்ளூர் பயணத்துறைக்கு ஊக்கமளிக்க அரசாங்கம் அறிவித்திருக்கும் இத்திட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால், அது செயற்படுத்தப்படவிருக்கும் முறைதான் சற்று குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
“நான் இந்தப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி என் குடும்பத்தை உள்ளூர் சுற்றுலாத் தலத்துக்கு அழைத்துச் செல்ல விரும்பு கிறேன். பற்றுச்சீட்டை ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்கள் பல இருப்பதால், அவற்றிலிருந்து நமக்கு விருப்பமானதைத் தேர்வு செய்வதற்கு குறிப்பிட்ட ஒரே முனையம் இருந்தால் சுலபமாக இருக்கும்,” என்றார் 49 வயது பொறியாளர் திரு ராஜு கோவிந்தசாமி.
இந்த சுற்றுலா ஊக்கத்தொகை திட்டத்திற்கு சிங்கப்பூரர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இருப்பினும் கிடைக்கப்பெறும் பற்றுச்சீட்டைப் பயன்படுத்தும் நடைமுறை எளிதாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புவதாகத் தெரிகிறது.