தகவல்தொடர்பு தொழில்நுட்ப (ஐசிடி) துறையில் 12,000க்கும் மேற்பட்ட வேலைகள் உள்ளன. அவற்றில் பெரும்பகுதி, கிட்டத்தட்ட 95 விழுக்காடு நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கானவை (பிஎம்இடி).
எஸ்ஜி ஒற்றுமை வேலைகள், திறன்களுக்கான தொகுப்புத்திட்டத்தின் கீழ் ஏப்ரல் முதல் இந்த மாத தொடக்கம் வரையில் ஐசிடி துறையில் ஏறக்குறைய 7,190 பேர் வேலைகள், பயிற்சி மற்றும் பயிற்சி பதவிகளில் அமர்த்தப்பட்டதற்குப் பிறகான வேலை வாய்ப்பு இது என்று மனிதவள அமைச்சு மற்றும் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (ஐஎம்டிஏ) நேற்று வெளியிட்ட வேலை நிலவர அறிக்கையில் தெரிவித்தது.
அவர்களில் சுமார் 2,160 பேருக்கு வேலை கிடைத்தது. இவர்களில் 85 விழுக்காட்டினர் பிஎம்இடி பிரிவினர். மேலும் 5,030 பேர் வேலை இணைப்பு, பயிற்சி மற்றும் பயிற்சி வாய்ப்புகளைப் பெற்றனர்.
இதுவரையில், எஸ்ஜி ஒற்றுமை வேலைகள், திறன்களுக்கான தொகுப்புத்திட்டத்தின் கீழ் அதிக வேலைவாய்ப்புகளைக் கொண்ட துறை இது என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்தார்.
வேலைவாய்ப்புகளில் 30 விழுக்காடு ‘இலகுவான தொழில்நுட்ப’ பணிகள். ஏனைய வேலைகளுக்கு ஆழமான தொழில்நுட்பத் திறன்கள் தேவை. ஐசிடி பின்னணி அல்லது அனுபவம் இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு பொருத்தமான இலகுவான தொழில்நுட்ப வேலைகளில், வாடிக்கையாளர் மேலாளர், மின்னிலக்க விளம்பர நிபுணர் உள்ளிட்ட வேலைகள் உள்ளன என்று அறிக்கை தெரிவித்தது. இந்த வேலைகள் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறைக்கு வாழ்க்கைத்தொழிலை மாற்ற விரும்பும் பணியிடைக்கால நபர்களை அதிகம் ஈர்க்கக்கூடும்.
மின்னிலக்கம் வழி விளம்பரப்படுத்தல் (டிஜிட்டல் மார்க்கெட்டிங்), மென்பொருள் பொறியியல், இணையப் பாதுகாப்பு போன்ற துறைகளில் மனிதவளத்திற்கான வலுவான தேவை உள்ளது. அதேபோல் வர்த்தகங்களை மின்னிலக்க உருமாற்றத்தை முன்னெடுக்கும் தலைவர்களும் தேவை என்று முகவைகள் மேலும் தெரிவித்தன. வளர்ந்து வரும் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய, ஊழியரணி மறுதிறன் பெற்று மாற்றம் பெற வேண்டும். 2015ஆம் ஆண்டிலிருந்து, அதிகமான உள்ளூர்வாசிகள் ஐசிடி துறையில் வேலைகளைப் பெற்றுள்ளனர். உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பு 17,000 அதிகரித்துள்ளது. இது இத்துறையின் மொத்த வேலைவாய்ப்பான 190,200ல் 71 விழுக்காடு என்று மனிதவள அமைச்சும் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் தெரிவித்துள்ளன.
பொருளியலில் ஏனைய துறைகளில் செயல்படும் தகவல்தொடர்பு தொழில்நுட்ப வல்லுநர்கள் இதில் சேர்க்கப்படவில்லை என்றும் அது குறிப்பிட்டது.
இந்தத் துறையில் சிங்கப்பூரர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற உதவும் வகையில் அரசாங்கமும் தொழில்துறையும் மும்முனை அணுகுமுறையை முன்வைத்துள்ளன.
ஒரு வழி, புதிய ஊழியர்களை பணியமர்த்தி, பயிற்றுவிக்கும் திட்டங்களில் ஈடுபடுத்துவதும் ஏற்கெனவே உள்ள பணியாளர்களுக்கு மறுதிறன் பயிற்சிகளை அளிப்பதும் ஆகும். மற்றோர் அணுகுமுறை நிறுவனம் சார்ந்த வேலைப் பயிற்சி, இணைப்புத் திட்டங்களை, குறிப்பாக அனுபவம் இல்லாதவர்களுக்கு வழங்குவதாகும். சிறிய, நடுத்தர நிறுவனங்களின் திறன் தேவைகளை நிறைவு செய்யும் திட்டங்களும் உள்ளன. இத்தகைய நிறுவனங்கள் பல்வேறு தொழில்முறை மாற்றுத் திட்டங்களில் பங்கேற்றுள்ளன.
கொவிட்-19 பொருளியலையும் ஊழியர் சந்தையையும் சீர்குலைத்துள்ள அதேவேளையில், மின்னிலக்கத் தொழில்நுட்பப் பயன்பாட்டையும் துரிதப்படுத்தியுள்ளது. இது புதிய வேலைகளை உருவாக்குவதற்கும் தகவல்தொடர்பு தொழில்நுட்பத் துறையில் மனிதவள தேவை அதிகரிப்பதற்கும் வழிவகுத்தது.
தமிழ் முரசு இணையப்பக்கத்தில் 10,000க்கும் அதிகமான வேலை வாய்ப்புச் செய்திகள். மேலும் அறிய: https://www.tamilmurasu.com.sg/jobs