மரபுடைமை தொடர்பில் 2019ஆம் ஆண்டில் $8.67 மில்லியன் மதிப்பிலான நன்கொடை பங்களிப்புக்காக நேற்று நடைபெற்ற ‘2019 மரபுடைமையின் புரவலர் விருது’ நிகழ்ச்சியில், 88 நன்கொடையாளர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.
நல்லாதரவு, ரொக்க நன்கொடை, கலைப்பொருள் அன்பளிப்புகள் அல்லது கடன்கள் என அளிக்கப்பட்ட அனைத்து நன்கொடைகளும் 2018ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட நன்கொடையைக் காட்டிலும் 33% அதிகம் என்று தேசிய மரபுடைமைக் கழகம் கூறியது. நேற்று நடைபெற்ற மெய்நிகர் நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் கலந்துகொண்டார்.
“உங்களின் ஆதரவால் நம் பன்முக மரபுடைமையை நம்மால் தொடர்ந்து அனுபவிக்கவும் பாராட்டவும் முடியும்,” என்று நன்கொடையாளர்களிடம் அவர் கூறினார்.
தம்முடைய பரம்பரை உடைமைகளை இந்திய மரபுடைமை நிலையத்திற்குக் கடனாகத் தந்துள்ள திரு பால் சுப்ரமணியத்திற்கு நிகழ்ச்சியின்போது ‘மரபுடைமையின் ஆதரவாளர் விருது’ வழங்கப்பட்டது.
தமது உறவினர்கள், மூதாதையர்கள் ஆகியோரின் கதைகள், சிங்கப்பூரில் குறைந்த எண்ணிக்கையில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் என்ற எண்ணத்தில் உடைமைகளைக் கடனாக அளித்ததாக அவர் கூறியிருந்தார்.
“ஒவ்வொருவரும் யாரோ ஒருவரின் வம்சாவளி. இன்று நாம் யார் என்பதற்கு அடையாளத்தை நம் வரலாறு கூறும். அதனால் அதில் உள்ள நன்மையை நாம் பயன்படுத்திக்கொள்வது முக்கியம்,” என்றார் வழக்கறிஞரான திரு பால்.