அரசாங்க உதவியுடன் கூடிய திட்டத்தில் அதிகமான பாலர் பள்ளிகள் இணையவுள்ளன. இதனால், அடுத்த ஆண்டில் இருந்து அதிகமான பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பாலர் கல்விக்குக் குறைந்த கட்டணம் செலுத்துவர்.
மொத்தம் 29 நிறுவனங்களால் நடத்தப்படும் 324 குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள், 2021 ஜனவரி முதல் புதிய பங்காளி நிறுவனத் தவணைக் காலத்தில் பங்கெடுக்க உள்ளன. இது, நடப்புத் தவணைக் காலத்தில் பங்கெடுத்துள்ள நிலையங்களைக் காட்டிலும் 30% அதிகம் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி குறிப்பிட்டார்.
அத்திட்டத்தின் மூலம் இப்போது 20,000 குழந்தைகள் பலன்பெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டில் அந்த எண்ணிக்கை 27,000க்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 2025ஆம் ஆண்டிற்குள் பாலர் பள்ளிகளில் அரசாங்க ஆதரவுடன் கூடிய இடங்களின் எண்ணிக்கை 80 விழுக்காடாக உயர்த்தப்படும் என்று அரசாங்கம் கடந்த ஆண்டில் தெரிவித்து இருந்தது. அதற்கேதுவாக, அடுத்த ஆண்டில் இருந்து பங்காளி நிறுவனத் திட்டம் விரிவுபடுத்தப்பட இருக்கிறது. 2019ல் அவ்விகிதம் 50 விழுக்காடாக இருந்தது.
கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கிய பங்காளி நிறுவனத் திட்டத்தின் முதல் தவணைக் காலத்தில் 23 பங்காளி நிறுவனங்களைச் சேர்ந்த 250 நிலையங்கள் பங்கெடுத்துள்ளன. இவ்வாண்டு டிசம்பருடன் அந்தத் தவணைக் காலம் முடிவிற்கு வருகிறது.
கட்டணத்தைக் குறைவாக வைத்திருக்க பங்காளி நிறுவனங்கள் அரசாங்க நிதியுதவியைப் பெறுகின்றன. கட்டண உச்ச வரம்பிற்கும் அவை இணங்கவேண்டும்.
பங்காளி நிறுவனத் திட்டத்தின் இரண்டாம் தவணைக் காலத்தில், நிலையங்கள் முழுநாள் குழந்தைப் பராமரிப்புச் சேவைக்கான மாதக் கட்டணமாக அதிகபட்சம் $760 வசூலிக்க முடியும். இப்போது அந்த உச்ச வரம்பு $800ஆக இருக்கிறது.
முழுநேர கைக்குழந்தைப் பராமரிப்புச் சேவைக்கான மாதாந்திரக் கட்டணம் இப்போது $1,400ஆக இருக்கும் நிலையில், அது அடுத்த ஆண்டில் இருந்து $1,330ஆகக் குறைக்கப்படும். இவ்விரு கட்டணங்களும் ஜிஎஸ்டியை உள்ளடக்கவில்லை.
பாசிர் பாஞ்சாங்கில் உள்ள ‘பிஸி பீஸ் லேனிங் விஷன் அட் இன்டர்லோக்கல்’ பாலர் பள்ளிக்கு நேற்று வருகைபுரிந்த அமைச்சர் மசகோஸ், தரம், அணுகக்கூடிய தன்மை, கட்டுப்படியாகும் தன்மை போன்ற காரணிகளின் அடிப்படையில் பங்காளி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இதனிடையே, அரசாங்க ஆதரவுடன் கூடிய பாலர் பள்ளிகளிலும் கட்டண உச்ச வரம்பு குறைக்கப்படும் என்று பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
இடைப்பருவ நோக்கில், முழுநாள் பாலர் பள்ளிச் செலவுகள் கிட்டத்தட்ட 300 வெள்ளியாகக் குறைக்கப்படும் என அவ்வமைப்பு தெரிவித்தது.
ஒட்டுமொத்தத்தில், பாலர் பருவத் துறைக்காக ஆண்டுதோறும் அரசாங்கம் செலவிடும் தொகை 2018ல் கிட்டத்தட்ட $1 பில்லியனாக இருந்த நிலையில், இன்னும் சில ஆண்டுகளில் அது இருமடங்கிற்கு மேல் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.