வாகனம் நிறுத்துமிடங்களில் மின்சார வாகனத்துக்கான மின்னூட்டு நிலையங்களை உருவாக்கும் திட்டத்துக்கான ஏலக் குத்தகை தொடர்பில் நிறுவனங்களுக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி மின்சார வாகனங்களுக்குரிய 600 மின்னூட்டு நிலையங்கள் பொருத்தப்படும்.
இத்தகைய ஏலக் குத்தகை தொடர்பாக ஆணையம் ஏலத்துக்கு அழைப்பது இதுவே முதல் முறை என்று நம்பப்படுகிறது. இங்குள்ள 200க்கும் மேற்பட்ட பொது கார்நிறுத்துமிடங்களில் 600 மின்னூட்டு இடங்கள் அமைந்திடும் என்று அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆணையம் நேற்று தெரிவித்தது.
ஏலக் குத்தகையை வெற்றிகரமாகக் கைப்பற்றுவோர், மின்னூட்டு நிலையங்களைப் பொருத்தும் பணியை 2022ஆம் ஆண்டுக்குள் முடித்துவிட வேண்டும் என்று ஆணையம் கூறியது.
“மேலும் சுத்தமான எரிசக்தி வாகனங்களின் பயன்பாட்டைத் துரிதப்படுத்த அடுத்த 10 ஆண்டுகளில் 28,000 மின்னூட்டு நிலையங்களை உருவாக்கும் நம் நாட்டின் குறிக்கோளுக்கு இது முக்கியமானதொரு முதல் படி,” என்றது ஆணையம்.
மின்சார வாகன மின்னூட்டு பகுதிகளைப் பொருத்தும் திட்டங்களில் இதுவரை ஆக உயர்ந்த லட்சியத்துடன் செயல்படும் நிறுவனம் ‘சன்சிப் குரூப்’.
2030ஆம் ஆண்டுக்குள் இங்கு 10,000 மின்னூட்டு நிலையங்களைப் பொருத்துவதைத் தன் குறிக்கோளாகக் கொண்டுள்ளதாக செப்டம்பர் மாதத்தில் நிறுவனம் அறிவித்தது.
இதையடுத்து போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங், தமது ஃபேஸ்புக் பதிவில் இதன் தொடர்பில் பதிவிட்டார்.
‘மின்சார வாகனங்களுக்கு முன்கூட்டியே பதிவு செய்துகொள்வதற்கான பதிவுக் கட்டண ஊக்குவிப்புத் தொகை’ மூலம் வரித் தள்ளுபடி உள்ளது. இத்துடன் அண்மையில் மாற்றியஅமைக்கப்பட்ட ‘வாகன வாயு வெளியேற்றம் குறித்த திட்டமும்’ அறிவிக்கப்பட்டது. இச்சலுகைகளைப் பயன்படுத்திக்கொண்டு மேலும் அதிகமான ஓட்டுநர்கள் மின்சார வாகனங்களுக்கு மாற ஊக்கம் பெறுவர் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“இத்துடன் நாம் நின்றுவிட மாட்டோம். தொழில்நுட்பம் மாறிவருகிறது. சிங்கப்பூரில் நம் உத்திமுறையை நாம் மறுஆய்வு செய்துகொண்டே இருப்போம். லட்சியத்துடன் செயல்படும்போது திட்டங்கள் வளர்ச்சி காணும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்,” என்றார் திரு ஓங்.