தமது பெற்றோர் வாழ்ந்த எண் 38, ஆக்ஸ்லி ரோடு குடும்ப வீடு தொடர்பில் தமது உடன்பிறப்புகள் கூறிய அவதூறுகளுக்கு எதிராக பிரதமர் லீ சியன் லூங் வழக்கு தொடுக்கவில்லை.
இதை ஒரு சாக்காக எடுத்துக்கொண்டு, அவர்கள் தமக்கு எதிராகக் கூறிய கருத்துகளைப் பயன்படுத்தி தமது நற்பெயருக்கு யார் வேண்டுமானாலும் களங்கம் ஏற்படுத்தி விடலாம் என்று அர்த்தமாகாது என்று திரு லீ, நேற்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற அவதூறு வழக்கில் சாட்சியமளித்தபோது கூறினார்.
தமக்கு எதிராக அவதூறு கூறும் செய்திகளை வெளியிட்டதற்காக ‘தி ஆன்லைன் சிட்டிஸன்’ இணையத் தளத்தின் ஆசிரியர் திரு டெரி சூவுக்கு எதிராக திரு லீ அவதூறு வழக்கு தொடுத்திருக்கிறார்.
அதன் தொடர்பிலான ஒரு வார நீதிமன்ற விசாரணையின் முதல் நாளில் திரு லீ நேற்று நீதிமன்றம் வந்தார்.
“ஆக்ஸ்லி ரோடு சொத்தின் விவகாரம் தொடர்பில் எங்கள் குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்டது பொதுவான ஒரு குடும்பச் சண்டை.
“அதன் தொடர்பில் நானோ எனது மனைவி ஹோ சிங்கோ, என் சகோதரர் லீ சியன் யாங், சகோதர் லீ வெய் லிங் இருவர் மீதும் எந்த பகைமையையும் வெளிப்படுத்தவில்லை,” என்று பிரதமர் கூறினார்.
தி ஆன்லைன் சிட்டிஸன் இணையத் தளம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியிட்ட ஒரு கட்டுரைக்கு, ‘பிரதமர் லீயின் மனைவி ஹோ சிங், குடும்ப உறுப்பினர்களுடன் உறவுகளைத் துண்டித்துக்கொள்ள அவர்கள் தொடர்பான கட்டுரைகளை யோசிக்காமல் வெளியிடுகிறார்’ என்று தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
அந்தக் கட்டுரை பிரதமரின் சகோதரி டாக்டர் லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதிய பதிவை மேற்கோள் காட்டியது. அதில், சிங்கப்பூரின் முதலாவது பிரதமரும் தங்கள் தந்தையுமான அமரர் லீ குவான் இயூவிடம் 38 ஆக்ஸ்லி ரோடு வீடு அரசிதழில் இடம்பெற்றுள்ளது என்று தவறான தகவலைத் தெரிவித்து ஏமாற்றி விட்டார் என்று டாக்டர் லீ எழுதியிருந்தார்.
“தி ஆன்லைன் சிட்டிஸன் கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் முற்றிலும் பொய்யானவை. அதன் மூலம் எங்கள் கட்சிக்காரரான திரு லீயின் நற்பெயருக்கும் மதிப்புக்கும் களங்கம் ஏற்பட்டு விட்டது,” என்று பிரதமரின் வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.
பிரதமரைக் குறுக்கு விசாரனை செய்த திரு சூவின் வழக்குரைஞர் திரு லிம் தியென், “பிரதமருக்கு எதிராக அவரது உடன்பிறப்புகள் கூறிய அவதூறுகளுக்கு அவர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் காரணமாகத்தான் எனது கட்சிக்காரர் திரு லீயின் உடன்பிறப்புகள் சொன்னதில் உண்மையிருக்கலாம் என்று நினைத்து அந்தக் கருத்துகளை தமது இணையத் தளத்தில் சேர்த்துக்கொண்டார்,” என்றார்.
அதற்குப் பதிலளித்த பிரதமர், “யார் எதை வேண்டுமானாலும் சொல்லிவிட முடியாது. எனது உடன்பிறப்புகளுடனான எனது அணுகுமுறை வேறுபட்டது,” என்று வலியுறுத்தினார். நாளை வழக்கு விசாரணை தொடர்கிறது.