சிங்கப்பூரர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள ‘சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான சுற்றுலா பற்றுச்சீட்டு’களைப் பயன்படுத்தி ஹோட்டல்கள், உல்லாசத் தளங்கள், உள்ளூர் சுற்றுலாக்கள் ஆகியவற்றுக்கு முன்பதிவு செய்யும் நடைமுறை நேற்று சுமூகமாக தொடங்கியது.
கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலால் பாதிக்கப்பட்டிருக்கும் உள்ளூர் சுற்றுப்பயணத் துறைக்கு ஆதரவு வழங்க, 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்களுக்கு $100 பெறுமானமுள்ள சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான சுற்றுலா பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
முதல் நாளான நேற்று பலர் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பற்றுச்சீட்டுகளின் முழு மதிப்பையும் பயன்படுத்திவிட்டனர்.
நேற்று நள்ளிரவு முன்பதிவு தொடங்கியதும் சாங்கி ரெக்கமெண்ட்ஸ், குளோபல்டிக்ஸ், டிரேவலோக்கா, டிரிப்.காம், குலூக் ஆகிய இணைய முன்பதிவு தளங்கள், பற்றுச்சீட்டுகள் செல்லுபடியாகும் ஹோட்டல்கள், உல்லாசத் தளங்கள், உள்ளூர் சுற்றுலாக்கள் ஆகியவற்றை வெளியிட்டன.
முன்பதிவு தொடங்கியதும் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தியவர்களில் திருமதி ஏஞ்சல் ஹோவும் ஒருவர். சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம், ரிவர் சஃபாரி ஆகிய உல்லாசத் தளங்களுக்குச் செல்ல இரு பெரியவர்கள், இரு சிறுவர்களுக்கு அவர் முன்பதிவு செய்தார். $100 பற்றுச்சீட்டைப் பயன்படுத்திய பிறகு திருமதி ஹோ $60 செலுத்தினார்.
“என்னைப் பொறுத்தவரை, இரு உல்லாசத் தளங்களுக்குச் செல்ல நால்வருக்கு $60 கட்டணம் என்பது நியாயமானதே. பற்றுச்சீட்டுகள் இல்லையெனில், முழுக் கட்டணத்தையும் செலுத்தி உல்லாசத் தளங்களுக்கு நாங்கள் செல்வது சந்தேகம்,” என்றார் அவர்.
உள்ளூர் ஹோட்டல்களில் தங்குவதற்கான தொகுப்புத் திட்டங்கள் விலைக் கட்டுப்படியாக இல்லை என்று திரு செலப் டான், 48, கூறினார். தமது இரு பிள்ளைகளும் விடுமுறை நடவடிக்கைகளில் ஈடுபட தாம் முன்பதிவு செய்யவிருப்பதாக அவர் தெரிவித்தார்.
நான்கு அல்லது ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்த திரு நாராயணசாமி, 68, விரும்பினார். ஆனால், ஓர் இரவுக்கு ஹோட்டல் அறைக்கான கட்டணம் குறைந்தபட்சம் $200 விதிக்கப்படுவதால் தாம் முன்பதிவு செய்யப் போவதில்லை என்று அவர் சொன்னார்.
$320 மில்லியன் மதிப்பிலான சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான சுற்றுலா பற்றுச்சீட்டுத் திட்டம், தேசிய அளவில் அரசாங்கத்தால் வழங்கப்படும் முதல் மின்னிலக்கப் பற்றுச்சீட்டுத் திட்டமாகும்.
இணைய முன்பதிவுத் தளங்களில் முன்பதிவு செய்வதில் சிரமத்தை எதிர்நோக்குவோர் தீவெங்கும் சமூக மன்றங்கள் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 69 முகப்புகளுக்குச் சென்று உதவி பெறலாம். தெம்பனிஸ் ஈஸ்ட் சமூக மன்றத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அத்தகைய முகப்புகளில் முன்பதிவு செய்ய நேற்று காலை அங்கு வந்தவர்களில் டாக்சி ஓட்டுநர் இங் பெங் லாமும் அவரது மனைவி ஓங் சூன் ஹுவாவும் அடங்குவர்.
மரினா பே சேண்ட்சில் உள்ள ‘சேண்ட்ஸ் ஸ்கைபார்க், அப்சர்வேஷன் டெக்’ மற்றும் ‘சிங்கப்பூர் ஃபிளையர்’ ராட்டினத்திற்குச் செல்ல இந்தத் தம்பதி நுழைவுச் சீட்டுகளுக்கு முன்பதிவு செய்தனர்.
பற்றுச்சீட்டுகளைக் கொண்டு முன்பதிவு செய்ய தெம்பனிஸ் ஈஸ்ட் சமூக மன்றத்திற்கு நேற்று காலை 11 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கும் இடையில் ஐந்து முதல் 10 பேர் வரை வந்தனர்.