பொய்யான சமய போதனைகளை கடந்த நான்கு ஆண்டுகளாக செய்த ஒருவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் தவறி விட்டது என்று எழுந்துள்ள குறைகூறல்களுக்கு அந்த மன்றம் பதிலளித்துள்ளது.
அந்த ஆடவரின் பொய்யான சமய போதனைகள் தொடர்பிலான செயல்கள் கடந்த மாதம் வெளிச்சத்துக்கு வந்தன.
முயிஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மேற்கூறப்பட்ட விவகாரத்தில், முன்னாள் உடற்பிடிப்பு ஊழியராகப் பணியாற்றிய 50 வயதுகளில் உள்ள ஆடவரின் செயல்கள் குறித்து தான் புலனாய்வு செய்ததாகவும், அதன் தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் இந்த விவகாரம் தொடர்பில் இதர அமைப்புகளுடன் சேர்ந்து கூடுதல் புலனாய்வு மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியது.
இந்த ஆடவரின் செயல் குறித்து நவம்பர் 9ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழில் வெளிவந்த செய்திக்குப் பிறகு முயிஸ் அச்செயல் குறித்து மறுவிசாரணை மேற்கொள்ள முடிவெடுத்தது.
நவம்பர் 10ஆம் தேதி முயிஸ் வெளியிட்ட தனது அறிக்கையில், 2018ஆம் ஆண்டிலேயே இந்த ஆடவரின் செயல் குறித்து தனக்குத் தெரிய வந்ததும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்தது.
ஆனால், இவ்விவகாரத்தில் முயிஸ் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று இணையவாசிகள் சிலர் கருத்துரைத்தனர்.
அந்த ஆடவரின் சமயக் குழுவில் உள்ள பெண்கள் கடந்த 15 ஆண்டுகளாக ஒரு சிறிய உணவகத்தையும் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்கள் என்றும் செய்தி வெளியானது.
இந்த ஆடவர் பற்றிய கூடுதல் விவரங்கள் தெரிந்தவர்கள் தங்கள் விசாரணைக்கு உதவ முன்வருமாறு முயிஸ் நேற்று மீண்டும் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டது. ஆடவர் பற்றிய மின்னஞ்சல்கள், குரல் பதிவுகள், இதர ஆவணங்கள் போன்ற ஆதாரங்களை இம்மாதம் 11ஆம் தேதிக்குள் தன்னிடம் சமர்ப்பிக்கும்படி அது கேட்டுக்கொண்டது.