சிங்கப்பூர்வாசிகள் உள்ளூர் ஹோட்டல்களில் தங்க கூடுதலாக செலவிடவும் அங்கு அடிக்கடி தங்க விரும்புவதாகவும் அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் (எஸ்எம்யூ) உன்னத சேவைக் கழகம் நடத்திய இந்த ஆய்வில் 450 பேர் பங்கேற்றனர். அவர்களில் 63 விழுக்காட்டினர், உள்ளூர் ஹோட்டல்களில் அடிக்கடி தங்க விரும்புவதாகக் கூறினர். ஹோட்டல்களில் தங்க கூடுதல் பணம் செலவிடத் தாங்கள் தயாராக இருப்பதாக 71 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
உணவு, பானத் துறை மற்றும் சுற்றுப்பயணத் துறைகளுக்கான மூன்றாம் காலாண்டு பயனீட்டாளர் மனநிறைவு குறியீட்டின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
இதன் தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வில், இவ்வாண்டு ஜூலைக்கும் செப்டம்பருக்கும் இடையே 2,500 உள்ளூர்வாசிகள் பங்கேற்றனர்.
கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலில், உணவகங்களில் உணவு வாங்கும் ஐவரில் மூவர், உணவைப் பொட்டலம் கட்டி செல்லும் சேவையை அல்லது உணவை வீட்டிற்கு விநியோகிக்கும் சேவையைப் பெறுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உணவை வீட்டிற்கு விநியோகிக்கும் சேவையைப் பெற விரும்புவோர், மீண்டும் அந்தந்த உணவகங்களில் உணவு வாங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, அங்கு உணவு விலை உயர்த்தப்பட்டாலும் அதை ஏற்கத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் ஆய்வு கண்டறிந்தது.
விசுவாசமாக இருப்பது என்ற அம்சத்தைப் பொறுத்தவரை, வீட்டிற்கு உணவு விநியோக சேவையைத் தேர்ந்தெடுப்போர், 73.8 புள்ளிகளைப் பெற்றனர். உணவைப் பொட்டலமிட்டு கொண்டு செல்வோர் 73.1 புள்ளிகளைப் பெற்றனர்.
மாறாக, உணவகத்தில் அமர்ந்து உணவருந்தும் வாடிக்கையாளர்கள் 68.9 புள்ளிகளை மட்டும் பதிவு செய்தனர்.
உணவு, பானத் துறை மற்றும் சுற்றுப்பயணத் துறைகளில் இணையம் வழி தகவல்கள் பெறப்பட்டு இருப்பது இதுவே முதன்முறை.