இங்கேயே பொருட்களை வாங்கி நிறுவனங்களுக்கு பயனீட்டாளர்கள் உதவுகிறார்கள்
சிங்கப்பூர் பயனீட்டாளர்களில் ஏறக்குறைய பாதிப்பேர் உள்ளூர் நிறுவனங்களில் பொருட்களை வாங்க விரும்புகிறார்கள். கொவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்டு உள்ள நிறுவனங்கள் மீண்டு வருவதற்கு உதவும் வகையில் அவர்கள் இதைச் செய்கிறார்கள்.
'ஆசியான் பயனீட்டாளர் மனவோட்டம்' என்ற ஆய்வறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது. அந்த ஆய்வை யுஓபி வங்கி நடத்தியது.
சிங்கப்பூரில் 1,000 பேரை உள்ளடக்கி அந்த ஆய்வு நடத்தப்பட்டது. கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் நிறுவனங்களுக்கு ஒரு நல்ல செய்தியாக ஆய்வு முடிவுகள் இருக்கின்றன. உள்ளூர் நிறுவனங்களை உள்ளடக்கி சிங்கப்பூர், சீன வர்த்தக தொழில் சபை ஆய்வு ஒன்றை நடத்தியது.
தங்களுக்கு வருமானம் குறைந்துவிட்டதாக 50க்கும் அதிக நிறுவனங்கள் அதில் தெரிவித்து இருந்தன. இதை டிபிஎஸ் வங்கி தனது ஆய்வறிக்கையில் சுட்டியது.
உள்ளூர் நிறுவனங்கள் கடந்த எட்டு மாத காலமாக படாதபாடுபட்டு வந்திருக்கின்றன. இந்த நிலையில் அவற்றுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வெள்ளியும் பெரும் பலன் தருவதாக இருக்கும் என்று யுஓபி வங்கியின், வங்கித் தொழில் குழுமத்தின் தலைவர் லாரன்ஸ் லோ தெரிவித்தார்.
உள்ளூர் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் போக்கு சிங்கப்பூரில் மட்டுமின்றி தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றிலும் காணப்படுகிறது.
இந்த வட்டார நாடுகளின் பயனீட்டாளர்கள் தங்கள் உள்ளூர் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிப்பதில் ஒற்றுமையைப் புலப்படுத்துகிறார்கள். இதில் இந்தோனீசியா, 72 விழுக்காட்டு அளவுடன் முதலிடத்தில் இருக்கிறது.
மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த நிலையில் உள்ளன.
இதனிடையே, வாடிக்கையாளர்கள் இணையத்தில் செலவிடுவதும் அதிகரிக்கிறது என்பது இந்த வங்கியின் பண அட்டை பரிவர்த்தனைகள் மூலம் தெரியவருகிறது.
உள்ளூர் நிறுவனங்கள் இணைய வர்த்தக ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ள இந்த வங்கி உதவியுள்ளது.
இவை ஒருபுறம் இருக்க, சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில் நடைமுறைகளைக் கொண்ட நிறுவனங்களில் பணத்தைச் செலவிட வேண்டும் என்ற எண்ணம் ஏறக்குறைய 43 விழுக்காட்டு சிங்கப்பூர் பயனீட்டாளர்களிடையே நிலவுகிறது என்பதையும் யுஓபி வங்கி நடத்திய ஆய்வு கண்டறிந்து இருக்கிறது.

