கிளமெண்டி வட்டாரத்தில் உள்ள இரண்டு குடியிருப்புக் கட்டடங்களில் முன்னோட்டத் திட்டமாக இரண்டு விவேக தபால்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
புதிய விவேக தபால்பெட்டியில் தபால்கள் போடப்பட்டதும் அந்தந்த குடியிருப்பாளர்களுக்கு அவர்களது கைபேசிகளில் தகவல் அனுப்பிவைக்கப்படும்.
இதனால் தங்கள் தபால்பெட்டிகளில் தபால் இருக்கிறதா எனத் தெரிந்துகொள்வதற்கு அவர்கள் அதைத் திறந்து பார்க்கத் தேவையில்லை.
இவ்வளவு காலமாக பயன்படுத்தப்படும் தபால்பெட்டிகளுக்குப் பதிலாக இந்த விவேகத் தபால்பெட்டிகளைப் பயன்படுத்த சிங்போஸ்ட் இலக்கு கொண்டுள்ளது.
'போஸ்ட்பால்' என்று அழைக்கப்படும் இந்த விவேக தபால்பெட்டி, கட்டடத்தில் வசிக்கும் அனைத்து வீடுகளின் தபால்களை வைத்திருக்கும்.
அவரவர் தபால்பெட்டிகளைத் திறக்க சாவியைப் பயன்படுத்தி திறப்பதற்குப் பதிலாக சிங்போஸ்ட் செயலி வழங்கும் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து விவேக தபால்பெட்டியிலிருந்து தங்கள் தபால்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
தங்கள் சார்பாக மற்றவர்கள் தபால்களைப் பெற்றுக்கொள்ளவும் செயலி மூலம் குடியிருப்பாளர்கள் ஏற்பாடு செய்யலாம்.
தபால் விநியோகத்தில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கும் போஸ்ட்பால் விவேக தபால்பெட்டி முறையால் கடிதங்கள் தவறாக விநியோகம் செய்யப்படும் சாத்தியம் குறையும்.
அதுமட்டுமல்லாது, தபால்காரரின் வேலைப் பளுவும் குறையும் என்று சிங்போஸ்ட் தெரிவித்தது.
விவேக தபால்பெட்டிகளுக்கான முன்னோட்டத் திட்டம் ஓராண்டுக்கு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த வீடுகளுக்கான தபால்களை போஸ்ட்பால் விவேக தபால்பெட்டி தானாகவே அடுக்கிவைத்து விடும். தபால்காரர்கள் அதைச் செய்ய வேண்டியதில்லை. அந்தக் கட்டடத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கான கடிதங்கள் அனைத்தையும் அவர்கள் அப்படியே போஸ்ட்பால் விவேக தபால்பெட்டிக்குள் போட்டுவிட்டால் போதும். கிளமெண்டி அவென்யூ 6 புளோக் 202ல் குடியிருப்பாளர்கள் புதிய விவேக தபால்பெட்டியை இம்மாதம் 18ஆம் தேதியிலிருந்து பயன்படுத்த தொடங்குவர். ழ
புளோக் 205ல் வசிப்பவர்கள் அடுத்த சில வாரங்களில் விவேக தபால்பெட்டியைப் பயன்படுத்த தொடங்குவர்.

