2016ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை வேலையிடங்களில் பாலியல் தொடர்பான தேவையற்ற குறுந்தகவல், அழைப்புகள் ஆகியவற்றின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்ததாக 'அவேர்' எனும் மகளிர் செயல், ஆய்வுச் சங்கம் தி நியூ பேப்பரிடம் நேற்று முன்தினம் தெரிவித்தது.
அதே காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் வேலையிடத்தில் அவர்களுக்கு இத்தகைய தொல்லைகளைக் கொடுப்போரின் எண்ணிக்கை மும்மடங்குக்கும் அதிகமாக அதிகரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக தொழில்நுட்ப உதவியுடன் நடத்தப்படும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் அத்துடன் ஒத்துப்போகும் வகையில் வேலையிடங்களில் பாலியல் தொடர்பான குறுந்தகவல்கள், அழைப்புகள் அனுப்பப்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் சங்கம் கூறியது.
பாலியல் ரீதியாக தாக்கப்பட்டோருக்ககான அதன் பராமரிப்பு நிலையத்தில் 2016ஆம் ஆண்டில் 47 பேருக்கு உதவியதாக சங்கம் தெரிவித்தது.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 140ஆக அதிகரித்ததாக அது கூறியது.
சமூக ஊடகம், தகவல் அனுப்பும் தளங்கள் போன்ற மின்னிலக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெண்களுக்குத் தெரியாமல் அவர்களைப் பாலியல் நோக்கத்துடன் படம் அல்லது காணொளி எடுப்பது, பாலியல் நோக்கத்துடன் அவர்களுக்குத் தகவல்கள் அல்லது அழைப்புகளை அனுப்புவது போன்றவை அதிகம் நிகழ்ந்துள்ளதாக கழகம் கூறியது.
கடந்த ஆண்டில் மட்டும் 41 தேவையற்ற, ஆபாசமிக்க பாலியல் தகவல்கள் தொடர்பான புகார்கள் பதிவாகின. மூன்றில் ஒரு பங்கு சம்பவங்களுக்குப் பாதிக்கப்பட்டோரின் சக ஊழியர்கள், மேற்பார்வையாளர்கள், வாடிக்கையாளர்கள் போன்றவர்கள் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. பாலியல் ரீதியான தாக்குதல்களால் பாதிக்கப்படும் பலர் அவை குறித்து புகார் நெய்வதில்லை என்று சங்கத்தின் சட்ட, ஆய்வுப் பிரிவின் தலைவர் திருவாட்டி ஷைலி ஜின்கொராணி தெரிவித்தார்.

