சிங்கப்பூரை கொள்ளைநோய் ஆட்டிவைத்தாலும், அந்நோயை ஒழிக்கும் போராட்டத்தில் பங்களிப்பதில் ஊழியர்கள் எவரும் பின்வாங்கவில்லை. இதைச் சிறப்பிக்கும் வகையில் நேற்று பிரதமர் லீ சியன் லூங் தம் ஃபேஸ்புக் வழி புதிய ஹேஷ்டேக் சவால் ஒன்றை அறிவித்தார்.
நான்கு மொழிகளிலும் நன்றி உரைத்த பிரதமர் லீ, சவால்மிக்க 2020ஆம் ஆண்டைப் பற்றி குறிப்பிட்டதுடன், ஊதியங்களும் வாழ்வாதாரங்களும் பாதிக்கப்பட்டதைப் பற்றியும் பேசினார். முன்களப் பணியாளர்கள், அத்தியாவசிய சேவைகளில் உள்ள ஊழியர்களின் தியாகங்களையும் அவர் குறிப்பிட்டார்.
'#toast2U' என்ற ஹேஷ்டேக் இணைப்புடன் அவர் அறிவித்த சவால் வழி, 'என்டியுசி இன்கம்' அதன் 'என்டியுசி யு கேர்' திட்டத்திற்கு நிதி ஒதுக்கும் என்றும் அது குறைந்த வருமான உறுப்பினர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் வெவ்வேறு உதவித்திட்டங்கள் மூலம் சென்றடையும் என்றும் கூறப்பட்டது.
இச்சவாலில் பங்கேற்க நீங்கள் செய்யவேண்டியது இதுதான். சவாலுக்கு உங்களை நியமனம் செய்தவரிடமிருந்து பானத்தைப் பெறுவதாக பாவனை செய்து, நீங்களும் பாராட்டு தெரிவிக்கும் காணொளி ஒன்றைப் பதிவு செய்ய வேண்டும். பானத்தைக் குடித்துவிட்டு அதை வேறு இருவருக்குத் தருவதாகக் கூறி நியமனம் செய்ய வேண்டும்.
பதிவேற்றம் செய்யும்போது '#toast2U', '#U Heart' இணைப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு '#toast2U' ஹேஷ்டேக்குக்கும் $2 நன்கொடை வழங்கப்படும்.

