உலகின் தலைசிறந்த வங்கியை வழிநடத்தும் வங்கியாளராக திரு பியுஷ் குப்தாவை (படம்) அனைவரும் அறிந்திருப்போம். உள்ளூர் வங்கி ஒன்றை, அனைத்துலக அளவில் அங்கீகாரம் பெறச் செய்து டிபிஎஸ் வங்கியின் உருமாற்றத்திற்குக் காரணமான இவர், பொது நிகழ்வுகளில் தன்னம்பிக்கை நிறைந்தவராகக் காணப்படுவார்.
ஆனால், அவரது பயணம் அத்தனை சுமுகமாக அமையவில்லை. அவர் தொடங்கிய இணையத்தளமான Go4i.com, 2000ஆம் ஆண்டில் தோல்வியில் முடிந்ததை அடுத்து கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக மனநலப் பிரச்சினையுடன் தவித்தார்.
கவலையைக் கடந்துவந்தார்
"என் திட்டம் கைகூடவில்லை. பெரிய முடிவுகளை வாழ்க்கையில் எடுத்தாக வேண்டிய சிக்கலுக்கு ஆளானேன்.
"ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் கவலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டேன். என் இணையத்தள நிறுவனத்தை முடக்கினேன். என் வாழ்க்கையோடு என்னதான் செய்வது என்பது குறித்து யோசிக்க முயற்சி செய்தேன்," என்றார். அப்போது அவருக்குக் கைகொடுத்தது, தியானம்.
அன்று தொடங்கிய தியானத்தை இன்றுவரை திரு குப்தா கைவிடவில்லை.
தூக்கமின்மையை சமாளித்தார்
தம் வேலையில் மனநலம் தொடர்பில் அவர் சந்தித்த இரு சம்பவங்களில் இதுவும் ஒன்று. மற்றொரு சமயம் தூக்கமின்மையால் அவர் பலநாட்களாக கடுமையாகப் பாதிக்கப்பட்டார்.
"இரு முறையும் எனக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது. பிரச்சினையைத் தீர்க்க அது உதவியது. மனித மூளை என்பது கட்டுப்படுத்தச் சிரமமான ஒன்று என்பதையும் சில நேரங்களில் அது கட்டுக்கடங்காமல் போகலாம் என்றும் இந்த இரண்டு சம்பவங்களிலிருந்து நான் கற்றுக்கொண்டேன்.
மருத்துவ உதவி தேவை
"இது மருத்துவம் தொடர்பான ஒன்று என்பதை அடையாளம் காண்பதே சிறந்தது. உடல்ரீதியாக ஏற்படும் மற்ற நோய்களைப் போலவே இதற்கும் தகுந்த உதவியை நாடுவது அவசியம். களங்கம் எனக் கருத வேண்டாம்
"இத்தகைய பிரச்சினையை ஒரு களங்கமாகக் கருதி இதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதில் பலர் தயக்கம் காட்டுவதை நான் அறிந்துகொண்டேன். ஆனால் எந்த அளவுக்கு வெளிப்படையாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு இந்தப் பிரச்சினையை எளிதில் சமாளிக்க முடியும்," என்றார் அவர்.
தமது தலைமைத்துவ பாணியை, பிறரது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மாற்றியமைக்க இவ்விரு சம்பவங்களும் உதவியதாக அவர் குறிப்பிட்டார். டிபிஎஸ் நிறுவனத்தில் 2009ஆம் ஆண்டில் சேர்ந்த திரு குப்தா, 60, தலைசிறந்த தலைமை நிர்வாக அதிகாரி விருதை சென்ற ஆண்டு பெற்றார்.
நிறுவனத்தில் மனநலத்துக்கு முக்கியத்துவம்
இவர் தம் நிறுவனத்தில் மனநலத்துக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார். மனநல அழுத்தம் ஏற்படக்கூடும் என்று முன்கூட்டியே அறிந்திருந்து பாதுகாப்பான சூழலை உருவாக்குவதில் முதலாளிகள் அக்கறை கொள்ளவேண்டும் என்பது அவரது ஆலோசனை.
கொவிட்-19 உலகில் மனநலம் பேணுவது மேலும் முக்கியமாகிறது.
உலகத்தையே உருகுலைய வைத்துள்ள கொவிட்-19 சூழலில், மனநல விவகாரங்கள் மேலும் முக்கியத்துவம் பெற்றுவிட்டதை நம்மால் உணர முடிகிறது.
தனிமை, பொருளியல் கவலை ஆகியவற்றால் மனநலப் பிரச்சினைகளுக்கு ஆளாவதாகத் தனித்து வேலை செய்யும் ஊழியர்களில் 36 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளதாக 'மெர்சர்' அறிக்கை ஒன்று கண்டறிந்தது.
ஊழியர் ஒருவர், தனக்கு மனநலப் பிரச்சினை இருப்பது வெளியே தெரிய வந்தால் அதை எதிர்மறைப் பண்பாகப் பிறர் பார்ப்பார்கள் என்று அஞ்சி வெளிப்படையாக அதைப் பற்றி பேசாமலும் இருக்கலாம்.
இருப்பினும், நிறுவனத்தின் முதலாளிகளே முன்வந்து தங்களின் போராட்டங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசும்போது, அனைவருக்கும் இதன் தொடர்பில் தெளிவு பிறக்கிறது, களங்கம் குறைகிறது.
தங்களின் வாழ்க்கையின் ஏதோ ஒரு காலகட்டத்தில் ஏழில் ஒருவர், மனநலம் தொடர்பில் (உணர்வு, கவலை, மதுபானம் அருந்துதல்) பிரச்சினையை சந்தித்திருப்பர் என்று ஆய்வுகள் கூறியுள்ளன.
குறிப்பாக இந்தக் கொள்ளை நோய் சூழலில், தங்களின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக வெவ்வேறு ஆய்வுகளில் பங்கேற்ற சுமார் 35 முதல் 50 விழுக்காட்டினர் கூறிஉள்ளனர்.
'நேஷனல் கேர்': 1800 202 6868
மனநலக் கழகத்தின் 'மெண்டல் ஹெல்த்': 6389 2222
சமேரிட்டன்ஸ் ஆஃப் சிங்கப்பூர்: 1800 221 4444
'சில்வர் ரிபன் சிங்கப்பூர்': 6385 3714
'டச்லைன்' ஆலோசனைச் சேவைகள்: 1800 377 2252

