இந்து இளங்கோவன்
சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 58,152 எட்டியுள்ளது. தடுப்பு மருந்துகள் உருவாக்க சோதனைகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத் துறையினரின் தன்னலமற்ற சேவையால் கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து பலர் குணமாகி வருகின்றனர்.
கிருமித்தொற்றுப் பரிசோதனை என்பது இந்த 11 மாதங்களில் நடைபெற்ற கிருமித்தொற்று தடுப்பு முயற்சியில் மிகப் பெரிய பங்கை வகுத்திருக்கிறது.
இந்தப் பரிசோதனை முறையின் மிக முக்கியமான கட்டம்தான் 'ஆர்என்ஏ டெஸ்டிங்' எனப்படும் 'ரிபோநியூக்ளிக்' அமிலப் பரிசோதனை.
நமது நாடு தொடர்ந்து இந்தக் கிருமித்தொற்றை ஒழிக்கப் போராடி வரும் நிலையில், இந்த 'ஆர்என்ஏ' பரிசோதனைக்கான அவசியம் அதிகரித்துள்ளது.
இந்தப் பரிசோதனையை செய்யக்கூடிய சிறப்பு ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்க தெமாசெக் அறநிறுவனம், தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி மற்றும் வேலை நியமன, வேலைத்தகுதிக் கழகத்துடன் இணைந்து இரண்டு வாரப் பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பயிற்சித் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி தொடங்கியது. பயிற்சியின் முதல் வாரத்தில், தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பாடங்கள் நடத்தப்பட்டன.
அதன் பிறகு பங்கேற்பாளர்கள் தெமாசெக்குடன் பணியாற்றும் ஆய்வகங்களுடன் இணைக்கப்பட்டு கொவிட்-19 சோதனை முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
"சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் அதற்கான பரிசோதனைகள் குறையவில்லை. வர்த்தகங்கள், பயணத்துறை, மனிதவளம், பொருளியல் என இன்னும் இந்த கிருமித் தொற்றால் பலவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளன.
"இந்தியா, மலேசியா, இந்தோனீசியா, ஹாங்காங் போன்ற நம்மைச் சுற்றியுள்ள நாடுகளிலிருந்து மக்களை சிங்கப்பூருக்குள் வர அனு மதிக்கும் கட்டத்தில் இந்தப் பரிசோதனைக்கான அவசியம் மேலும் அதிகரிக்கும். பாதுகாப்பு, சோதனை செயல்பாட்டு முறைகள், 'பைப்பெடிங்' சோதனை என மாணவர்களை சிறந்த முறையில் ஆயத்தப்படுத்தும் வகையில் இப்பாடத்திட்டம் அமைந்துள்ளது," என்று தெரிவித்தார் இந்தப் பாடநெறியைக் கற்றுக்கொடுக்கும் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் விரிவுரையாளரும் ஆராய்ச்சியாளருமான டாக்டர் அமலதாஸ் அன்புராஜ்.
பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள், தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்கள் மட்டும் அல்லாமல் பொதுமக்களும் இந்தப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்று தங்களது திறன்களை மேம்படுத்திக்கொள்ளலாம்.
மேலும், ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மருத்துவ ஆய்வக உதவியாளர்கள், ஆய்வகங்களில் கொவிட்-19 சோதனை எவ்வாறு கையாளப்படுகிறது என்பதைப் பற்றி கற்றுக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும் தெரி விக்கப்பட்டது.
சிங்கப்பூர் சுகாதார அமைச்சு, உலக சுகாதார நிறுவனம் கொவிட்-19 பரவலை முன்னிட்டு விதித்துள்ள நெறிமுறைகளைக் கடைப்பிடித்து வருகிறது.
இந்த நெறிமுறைகளின்படி கொவிட்-19 கிருமித்தொற்றுப் பரிசோதனை செயல்முறையில் 'Confirmatory Test' என்று அழைக்கப்படக்கூடிய ஒரு பரிசோதனையை செய்ய வேண்டும்.
'ரிபோநியூக்ளிக்' அமிலம் மரபணு தொடர்புடைய இந்த கொவிட்-19 கிருமித்தொற்றின் முதல் கட்டப் பரிசோதனை, மூக்கின் வழி திரவ மாதிரியை எடுப்பது. இதிலிருந்து கிடைக்கும் மாதிரியைக் கொண்டு ஒருவருக்கு கிருமித்தொற்று உள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்ய முடியாது.
அந்த மாதிரியை மருந்தக ஆய்வகங்களுக்கு அனுப்பி 'ரிபோநியூக்ளிக்' அமில பரிசோதனையின் மூலம் கொரோனா உள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். இந்த பரிசோதனையின் செயல்முறையை இந்தப் பயிற்சித் திட்டத்தில் மாணவர்கள் கற்றுக்கொள்கின்றனர் என்றும் விளக்கப்பட்டது.

