விண்வெளியை ஆராயும்பொழுது விண்வெளி வீரர்களுக்கு நீண்டகாலத்திற்குக் கெட்டுப் போகாத, சுவையான, ஊட்டச்சத்துமிக்க உணவை வழங்கவேண்டும் என்பதே தொழில்முனைவர் யூஜின் வாங்கின் கனவு. நுண்பாசிகளைக் கொண்டு தமது கனவை நனவாக்குவது இவரது இலக்கு.
அதிக புரதச்சத்து கொண்டு உள்ள தாவரமான சோயா அவரையில் 30% புரதச்சத்து இருக்கிறது. மாறாக, தாதுப்பொருள்களும் உயிர்ச்சத்துகளும் நிரம்பிய நுண்பாசிகளில் 60% புரதச்சத்து இருக்கிறது.
உயிர்வினைக்கலனுள் நுண்பாசிகளை நொதிக்க வைக்கும்பொழுது, மூன்று நாள்களுக்குள் அவை உண்ணத் தகுந்த புரதமாக மாறிவிடுகின்றன. அவற்றைக் கொண்டு பல்வேறு தாவர உணவு வகைகளைத் தயாரிக்கலாம்.
“சிறிய அளவிலான உயிர்வினைக்கலனை வடிவமைத்து, அதை விண்கலனில் பொருத்திவிடலாம்,” என்கிறார் திரு வாங்.
ஆனால், அதற்குமுன் சிங்கப்பூர் மக்களுக்கு உணவளிக்க விரும்புகிறார் ‘சோஃபிஸ் பயோநியூட்ரியன்ட்ஸ்’ உணவுத் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான திரு வாங்.
நுண்பாசிகளை உண்ணத்தகுந்த புரதமாக மாற்றும் செயல்முறையை முழுமையாக்கிவிட்ட அந்நிறுவனம், ‘அறிவியல் பூங்கா 2’ல் தனது உற்பத்தி நிலையத்தை அமைக்கத் தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு பிற்பாதியில் அந்நிலையம் செயல்பாட்டிற்கு வரும்.
மொத்தம் 464 சதுர மீட்டர் பரப்பளவில் அமையும் அந்த உற்பத்தி நிலையத்தில் 2,000 லிட்டர் முதல் 20,000 லிட்டர் வரையிலான உயிர்வினைக்கலன்கள், தெளிப்பு உலர்த்திகள் போன்ற சாதனங்களைக் கொண்டிருக்கும்.
புதிய நிலையத்தில் அமையும் 20,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட உயிர்வினைக்கலனில் இருந்து ஒரு மாதத்திற்கு 10 டன் புரத மாவைத் தயாரிக்கலாம் என திரு வாங் குறிப்பிட்டார்.
“ஒரு டன் சோயா புரதம் தயாரிக்க ஐந்து ஹெக்டர் நிலம் தேவை. ஆனால், எங்களுக்கு 0.02 ஹெக்டர் நிலம் போதும்,” என்கிறார் ‘சோஃபிஸ் பயோநியூட்ரியன்ட்ஸ்’ தலைமைச் செயல் அதிகாரி பார்னபாஸ் சான்.
‘ஏ ஸ்டார்’ எனும் அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பின் சிங்கப்பூர் உணவு, உயிர்தொழில்நுட்ப புத்தாக்க நிலையத்தில் அமைந்துள்ள அந்நிறுவனத்தின் ஆய்வகத்தை அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று பார்வையிட்டார்.
அதற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஹலிமா, “மாற்று உணவு மூலங்களுக்கான எல்லாத் தெரிவுகளையும் ஆராய வேண்டியது அவசியம். அதன்மூலம் இன்னும் பத்தாண்டுகளுக்குள் தனது ஊட்டச்சத்து தேவையில் 30 விழுக்காட்டை தானே தயாரிக்க வேண்டும் எனும் இலக்கை சிங்கப்பூர் அடைய முடியும்,” என்றார்.
வானிலை, பருவநிலை மாற்றங்களும் கரியமிலமாயு வெளியீட்டைக் குறைக்க வேண்டி இருப்பதும் பாரம்பரிய முறைப்படி மட்டும் உணவை உற்பத்தி செய்வதில் சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றன என்றும் திருவாட்டி ஹலிமா சொன்னார்.
உணவு மீள்திறன் கொண்ட நாடாக சிங்கப்பூரை மாற்ற உதவ, அதிக மாற்றுப் புரத நிறுவனங்களை அமைப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.