கொவிட்-19 நோய்ப் பரவல் ஏற்படுத்திய நெருக்கடியால் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் அதிக நிறுவனங்கள் மின்னிலக்கமயமாகி வருகின்றன; தனிமனிதர்கள் இணையவெளியை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
அதே வேளையில், கியூஆர் குறியீடு மோசடிகள், வாட்ஸ்அப் கணக்கைத் திருடுதல், தகவல் திருட்டு 'ஃபிஷிங்' மின்னஞ்சல்கள் போன்ற வழிகளில் இணையப் பாதுகாப்பு தொடர்பான அபாயங்களும் அதிகரித்து வருகின்றன.
இத்தகைய சூழலில், இணையத்தில் மறைந்திருக்கும் ஆபத்துகள் குறித்தும் அவற்றில் இருந்து காத்துக்கொள்வது எப்படி என்பது குறித்தும் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் நேற்று ஏற்பாடு செய்து இருந்த 'மின்னிலக்கமயமும் இணையப் பாதுகாப்பும்' எனும் இணையக் கருத்தரங்கில் பங்கேற்ற நிபுணர்கள் நால்வர் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
அவர்களில் ஒருவரான சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பின் தலைமை நிர்வாகி டேவிட் கோ, கடந்த ஆண்டில் 'ரேன்சம்வேர்' முறையில் பணம் கேட்டு மிரட்டிய 35 சம்பவங்கள் இடம்பெற்ற நிலையில், இவ்வாண்டின் முதல் பத்து மாதங்களில் அத்தகைய 60 சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாகத் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் இணையப் பாதுகாப்பு குறித்த பொதுவான விழிப்புணர்வை அதிகப்படுத்துவதற்காக சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பானது கடந்த அக்டோபர் மாதம் 'பாதுகாப்பான இணையவெளிப் பெருந்திட்டத்தை' அறிமுகப்படுத்தியது. இலவச இணையப் பாதுகாப்புப் பரிசோதனை, முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு ஏதேனும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளனவா என்பதை அறிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது உள்ளிட்டவை அதில் அடங்கும்.
சிங்கப்பூரின் நீர் விநியோகத்தைப் பொதுப் பயனீட்டுக் கழகம் நிர்வகிப்பது போலவே இணையப் பாதுகாப்பு அமைப்பு செயல்பட முயல்வதாக திரு கோ குறிப்பிட்டார்.

