சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் (என்யுஎஸ்) படித்துக்கொண்டிருந்த சீன நாட்டவரான சியே சின், பாதியிலேயே படிப்பைக் கைவிட்டார். ஆனால் அனைத்துலகப் பள்ளி ஒன்றில் பகுதிநேர ஆசிரியர் வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக போலி என்யுஎஸ் சான்றிதழைத் தயாரித்தார்.
போலி ஆவணத்தைத் தயாரித்து அதைப் பயன்படுத்திய குற்றத்திற்காக நேற்று நிரந்தரவாசியான சியேவுக்கு $4,000 அபராதம் விதிக்கப்பட்டது.
கணினிப் பொறியியல் பட்டப்படிப்புக்கான சான்றிதழ் ஒன்றைப் பதிவிறக்கம் செய்த சியே, மென்பொருள் உதவியுடன் அதில் தனது பெயரைப் பொறித்துக்கொண்டார்.
எசென்சியா அனைத்துலகப் பள்ளியில் பகுதிநேர ஆசிரியர் வேலைக்கான நேர்காணலுக்குச் சென்று, வேலையில் சேர்வதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார் சியே.
வேலை விண்ணப்பத்துடன் சியே சமர்ப்பித்திருந்த சான்றிதழின் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய என்யுஎஸ்சுடன் அனைத்துலகப் பள்ளி நிர்வாகி தொடர்புகொண்டார். தன் பட்டதாரிகள் பதிவேட்டுடன் சியேவின் சான்றிதழை என்யுஎஸ் சரிபார்த்ததில் சியேவின் பெயர் அதில் இடம்பெறவில்லை என்று தெரிய வந்தது.
இதையடுத்து என்யுஎஸ் ஊழியர் ஒருவர், போலிசாரிடம் புகார் அளித்தார்.