கரையோரப் பூந்தோட்டங்களுக்குச் சென்ற மாது ஒருவரை அங்கிருந்த நீர்நாய் ஒன்று கடித்ததாகக் கூறப்படுகிறது.
'சிங்கப்பூர்ரீடிஸ்கவர்' பற்றுச்சீட்டைப் பயன்படுத்தி தம் மகளுடன் கரையோரப் பூந்தோட்டங்களைப் பார்க்க கடந்த திங்கட்கிழமை சென்றதாக ஸ்டோம்ப் இணையப்பக்கத்துக்கு அனுப்பிய செய்தியில் அந்த வாசகர் குறிப்பிட்டிருந்தார்.
அன்றைய தினம் மாலை ஐந்து மணியளவில் அங்கிருந்த நீர்நாய்க் கூட்டத்தை கைபேசியில் காணொளி எடுக்க ஆரம்பித்த அந்த மாதின் மீது அந்த நீர்நாய்க்கூட்டம் பாய்ந்ததாகவும் ஒரு நீர்நாய் அவரது பாதத்தைக் கடித்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், காலில் வலி ஏற்பட்டதை உணர்ந்ததுடன் ரத்தம் கொட்டியதையும் பார்த்தார்.
பின்னர் அங்கிருந்த பணியாளர்களை அணுகியதில் அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது.
கணுக்காலின் ஒரு பக்கத்தில் 2 செ.மீ. நீள காயமும், மறு பக்கத்தில் 1 செ.மீ. நீள காயமும் ஏற்பட்டதாகவும் பெரிய காயத்தில் 3 தையல்கள் போடப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கரையோரப் பூந்தோட்டங்களில் முதலுதவி பெறச் சென்ற போது கையுறை இல்லாததால் அவருக்கு சிகிச்சை வழங்கத் தாமதமானதைக் குறிப்பிட்டு, தேவையான முதலுதவி சாதனங்களை வைத்திருக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கையும் வைத்தார் அந்த மாது.
4 நீர்நாய்கள் இருந்த அந்த கூட்டத்திடமிருந்து சுமார் 3 மீட்டர் இடைவெளியில் இருந்ததாக அந்த மாது குறிப்பிட்டார்.
அருகில் சென்றாலோ, தொட்டாலோ, விரட்டினாலோ நீர்நாய்கள் அச்சமுற்று மறுவினை புரியும் என தேசிய பூங்காக்கள் கழகம் பொதுமக்களுக்கு நினைவுறுத்தியுள்ளது.

