காதலியைக் கொன்ற பங்ளாதேஷிய ஊழியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி மாலை கேலாங் டிராகன் ஹோட்டலில் தமது காதலியான இந்தோனீசியப் பணிப்பெண் நூர்ஹிடாயாத்தி வார்த்தோனோ சுராதாவின் கழுத்தை நெரித்துக் கொன்றார் 31 வயது அகமது சலிம்.
திருவாட்டி நூர்ஹிடாயாத்தியை அகமது கொலை செய்தது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய நீதித்துறை ஆணையர் மேவிஸ் சியோன், அவருக்கு மரண தண்டனையை விதித்தார். அகமதுக்கும் திருவாட்டி நூர்ஹிடாயாத்திக்கும் இடையிலான உறவு அவர்கள் இருவரும் 2012ஆம் ஆண்டு மே மாதம் தற்செயலாகச் சந்தித்துக்கொண்ட பிறகு தொடங்கியது. 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொள்ள இருவரும் முடிவெடுத்திருந்தனர்.
இந்நிலையில், 2018ஆம் தேதி நடுப்பகுதியிலிருந்து பங்ளா
தேஷைச் சேர்ந்த ஷமின் ஷமிசுர் ரஹ்மானுடன் திருவாட்டி நூர்ஹிடாயாத்தி தொடர்பு வைத்துக் கொள்ளத் தொடங்கினார்.
திருவாட்டி நூர்ஹிடாயாத்தி தம்மை ஏமாற்றுவதாகச் சந்தேகித்த அகமது இதுகுறித்து அவரிடம் பேசினார். அப்போது தாம் இன்னோர் ஆடவருடன் தொடர்பு வைத்திருப்பதை திருவாட்டி நூர்ஹிடாயாத்தி ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, திருமணத்துக்காக தமக்குப் பெண் தேடும்படி தமது தாயாரை அகமது கேட்டுக்கொண்டார்.
அவரது தாயாரும் அவருக்குப் பெண் தேடி திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்தார். திருமணம் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சில மாதங்கள் கழித்து, அகமதும் திருவாட்டி நூர்ஹிடாயாத்தியும் மீண்டும் ஒன்றுசேர்ந்தனர். இருப்பினும், அவர்களுக்
கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. திருவாட்டி நூர்ஹிடாயாத்தி வேறொரு ஆடவருடன் தொடர்பு வைத்திருந்ததே இதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது. ஒருமுறை ஹோட்டல் அறையில் இருந்தபோது துண்டு ஒன்றை
திருவாட்டி நூர்ஹிடாயாத்தியின் வாய் மேல் வைத்து அகமது அழுத்தினார். திருவாட்டி நூர்ஹிடாயாத்தி எதிர்த்துப் போராடியதும் அவ்வாறு செய்வதை அகமது நிறுத்தினார்.
இந்நிலையில், பங்ளாதேஷைச் சேர்ந்த ஹனிஃபா முகம்மது அபுவுடன் திருவாட்டி நூர்ஹிடாயாத்திக்குப் பழக்கம் ஏற்பட்டது.
தமக்குப் புதிய காதலன் இருப்பதாக அகமதிடம் தெரிவித்த திருவாட்டி நூர்ஹிடாயாத்தி, பங்ளாதேஷில் பார்த்துவைத்த பெண்ணையே அகமது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார். அகமதுடனான உறவை அவர் முறித்துக்கொண்டார்.
இந்நிலையில், சில நாட்கள் கழித்து இருவரும் சந்தித்து ஹோட்டலில் பாலியல் உறவு கொண்டனர். திரு ஹனிஃபாவுடனான உறவை முறித்துக்கொள்ள திருவாட்டி நூர்ஹிடாயாத்தி மறுத்ததை அடுத்து, துண்டைப் பயன்
படுத்தி அகமது அவரது கழுத்தை
நெரித்தார்.
திருவாட்டி நூர்ஹிடாயாத்தியின் காதுகள் வழியாக இரத்தம் கசிந்ததை அடுத்து, கூடுதல் பலம் பயன்படுத்தி அகமது அவரது கழுத்தை நெரித்தார். இதில் திருவாட்டி நூர்ஹிடாயாத்தி சுயநினைவு இழந்தார். அத்துடன் நிறுத்தி
விடாமல் தமது காதலியின் மரணத்தை உறுதி செய்ய தாம் கொண்டு வந்த கயிற்றைப் பயன்
படுத்தி அவரது கழுத்தை மீண்டும் அவர் நெரித்தார். திருவாட்டி நூர்ஹிடாயாத்தியின் உயிரற்ற உடலை அங்கேயே விட்டு விட்டு தாம் தங்கியிருந்த சுங்கை தெங்கா தங்கும் விடுதிக்கு அவர் சென்றார்.
அங்கு சக ஊழியர் காலிக் முகம்மது அப்துல் என்பவரிடம் $1,000 கொடுத்து பங்ளாதேஷில் உள்ள தமது குடும்பத்துக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொண்டார். தாம் கொலை செய்துவிட்டதாக திரு காலிக்கிடம் அகமது தெரிவித்தார்.
அன்றிரவு 10.15 மணி அளவில் ஹோட்டல் அறையில் திருவாட்டி நூர்ஹிடாயாத்தி மாண்டு கிடப்பதை ஹோட்டல் ஊழியர் ஒருவர் கண்டுபிடித்தார்.
மறுநாள் காலை 10.45 மணி அளவில் அகமது கைது செய்யப்பட்டார். புதிய காதலனுடனான உறவை முறித்துக்கொள்ள திருவாட்டி நூர்ஹிடாயாத்தி மறுத்தால் அவரைக் கொலை செய்ய அகமது முன்கூட்டியே திட்டமிட்டதை அவர் ஹோட்டல் அறைக்கு கயிற்றைக் கொண்டு சென்றது நிரூபிப்பதாக நீதிபதி கூறினார். அகமதின் கோபத்தை திருவாட்டி நூர்ஹிடாயாத்தி தூண்டியதால்தான் அகமது அவரது கழுத்தை நெரித்ததாக தற்காப்பு வழக்கறிஞர் கூறியதை நீதிபதி ஏற்க மறுத்தார்.
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தங்கள் கட்சிக்காரர் திட்டமிட்டுள்ளதாக அகமதின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

