"பள்ளிக்குத் திரும்பும் மாணவர் களுக்கு 'டிரேஸ்டுகெதர்' கருவி கட்டாயமல்ல, அதனால் மாணவர்கள் அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை என்று கல்வி துணை அமைச்சர் சுன் சூலிங் வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் 'டிரேஸ்டு கெதர்' கருவி விநியோகிக்கப்பட்ட பிறகு அது கட்டாயமாக்கப்படும் என்று பெற்றோர்களுக்கு அவர் உறுதியளித்தார்.
"உங்களுடைய குடியிருப்புப் பேட்டைகளுக்கு அந்தக் கருவி வந்து சேரவில்லையெனில் கவலைகொள்ளத் தேவையில்லை. பள்ளிகள் திறக்கப்படும்போது அது கட்டாயமாக்கப்படாது," என்று நேற்று காலை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் அவர் விளக்கியிருந்தார்.
கொவிட்-19, 3வது கட்டத் தளர்வுக்குப் பிறகு அடுத்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
தொடக்கக்கல்லூரிகள், மில்லெனியா கல்விக் கழகம் ஜனவரி 29ஆம் தேதி திறக்கப்படுகிறது.
இதன் தொடர்பில் கல்வி அமைச்சு தமது இணையப் பக்கத்தில் பல்வேறு வழிகாட்டிகளை வெளியிட்டிருந்தது. இதையொட்டி அமைச்சர் சுன் சூலிங் விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சின் வழிகாட்டியின்படி ஏழு வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் அனைவரும் 'டிரேஸ்டு கெதர்' கருவி அல்லது அதன் கைபேசி செயலியை பள்ளிகளில் பயன்படுத்த வேண்டும்.
இருந்தாலும் சமூக மன்றம் அல்லது சமூக நிலையங்களிலிருந்து 'டிரேஸ்டுகெதர்' கருவி அனைத்து மாணவர்களும் பெற்ற பிறகு அதனைப் பயன்படுத்தி உள்ளே நுழையும் 'சேஃப்என்ட்ரி' முறை அமலாக்கப்படும். அதுவரை கைபேசிச் செயலியைப் பயன்படுத்தலாம்.
'டிரேஸ்டுகெதர்' கருவியை மறந்து விட்டலோ, வேறு ஏதாவது ஓர் இடத்தில் வைத்துவிட்டாலோ, கைபேசியில் அந்தச் செயலி இல்லாவிட்டாலோ மாணவர்கள் பள்ளிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படாது என்று அமைச்சின் இணையப் பக்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாட்டில் உள்ள 38 சமூக நிலையங்களில் ஏதாவது ஒன்றிலிருந்து 'டிரேஸ்டுகெதர்' கருவி குடியிருப்பாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருந்தது.
ஆனால் கொவிட்-19 சூழலில் மக்கள் நெருக்கமாக நீண்ட வரிசையில் நின்றதால் படிப்படியாக அதனை விநியோகிக்க அரசு முடிவு செய்தது.
தற்போது தங்களுடைய வட்டாரத்தில் உள்ள சமூக நிலையங்களில் விநியோகித்தால் மட்டுமே குடியிருப்பாளர்கள் அதனைப் பெற்றுக்கொள்ள இயலும்.
ஏழு வயதுக்கு மேற்பட்ட குடியிருப்பாளர்கள் உட்பட அனுமதி அட்டை வைத்திருப்பவர்களுக்கும் தலா ஒரு கருவி வழங்கப்படும்.
நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் லீ சியன் லூங், இம்மாதம் 28ஆம் தேதி 3வது கட்டத் தளர்வுக்குள் சிங்கப்பூர் நுழைவது குறித்து பேசியிருந்தார். இந்த நிலையில் அமைச்சர் சுன் சூலிங்கின் கருத்து வெளியாகியுள்ளது.
"முந்தைய நாள் இரவில் 30 தொண்டூழியர்களுடன் நான் பங்கேற்றபோது அனைவரும் புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு நம்பிக்கையும் ஊக்கமும் அளித்தனர்," என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சருமான சுன் சூலிங் நேற்று கூறினார்.
"பாதுகாப்பாக இருங்கள், விழிப்புடன் இருங்கள். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து சமாளிக்க முடியும்," என்றார் அவர்.

