சிங்கப்பூரின் தமிழ் முன்னோடி இலக்கியங்களில் ஒன்றாகக் கருதப் படும் 'நன்னெறித் தங்கம் பாட்டு' இயல், இசை, நாட்டிய வடிவில் இம்மாதம் 6ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு மக்களிடையே கொண்டு சேர்க்கப்பட்டது.
2018ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தமிழிசையை வளர்க்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட கலாமஞ்சரி நிறுவனம், தமிழ்மொழி விழா 2020ன் ஓர் அங்கமாக இந்நிகழ்ச்சியைப் படைத்தது.
இந்த மெய்நிகர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்ட கலாசார, சமூக இளையர்துறை மற்றும் வர்த்தக தொழில்துறை துணை அமைச்சர் திரு. ஆல்வின் டான், "பல இனக் கலாசாரம் சிங்கப்பூரின் சிறப்பு. நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்திருக்கும் கலாசாரம், பழக்க வழக்கங்கள் நம்மை பல இனத்தவருடன் ஒன்று கூடி வாழ்வதற்கு வழி வகுத்திருக்கிறது. அதுவே சிங்கப்பூரின் தனிச்சிறப்பு," என்றார்.
சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்ட மூத்த தமிழறிஞர் முனைவர் சுப. திண்ணப்பன், நன்னெறி என்பது நல்லொழுக்கத்தை எடுத்துரைப்பது, தங்கம் என்றால் ஒரு பெண்ணைப் பார்த்துக் கூறுவது போல் அமைந்துள்ளது என்று நன்னெறித் தங்கம் பாட்டு என்ற தலைப்பிற்கான விளக்கத்தைக் கூறினார்.
ஏறத்தாழ நூற்றி நாற்பது கவிதைகளைக் கொண்ட இப்புத்தகம் 1868ஆம் ஆண்டு திரு.நாராயணசாமி நாயக்கர் என்பவரால் எழுதப்பட்டது. அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் சுயமுன்னேற்றத்தைக் கருத்தில் கொள்ளாது தீய பழக்க வழக்கங்களை மேற்கொண்டு அறநெறி தவறி வாழ்ந்து வந்தனர்.
அவர்களின் இந்நிலையைக் கண்டு வருந்தி 3 வரிகளில் கல்வி, பெற்றோரைப் பேணுதல், புறங் கூறாமை, ஆசானை மதித்தல், ஊக்கம் உடைமை, பொய் சொல்லாமை, நன்றி மறவாமை என பல்வேறு நல்லொழுக்கங்களைப் பற்றி கவிஞர் இப்புத்தகத்தில் எழுதியிருக்கிறார். இவற்றிற்கான விளக்கங்களை முனைவர் சுப. தின்னப்பன் எழுதியுள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 23 கவிதைகளுக்கு, முனைவர் கே. சிவராஜ் இசையமைக்க கலாமஞ்சரியின் நிறுவனர் திருமதி சௌந்தரநாயகி வயிரவனுடன் திருமதி தேனம்மை பழநியப்பன் இப்பாடல் களைப் பாடியிருக்கிறார்.
திரு எஸ் தேவராஜன் மிருதங்கம் இசைக்க, திரு வே சிவகுமார் வயலின் வாசிக்க திரு விஜயசங்கராமுவின் காணொளியில் 'நன்னெறித் தங்கம்' என்ற தலைப்பில் இப்பாடல்கள், நிகழ்ச்சியில் ஒலிவட்டாகவும் வெளியிடப்பட்டது.
'ஸூம்' வழி நேரடிப்படைப்பில் திருமதி. பிரியா சிறப்பாக நிகழ்ச்சியை வழி நடத்த 23 கவிதைகளையும் திரு ஜெரி கோ என்ற சீன இளைஞர் உட்பட பள்ளி மாணவர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினர் அதன் தமிழ் மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்புடன் வாசித்தனர்.
இந்த ஆங்கில மொழிபெயர்ப்பை திருமதி வள்ளிக்கண்ணு செய்து இருந்தார். திருமதி சரஸ்வதி ஐயர் நன்றியுரை கூற நிகழ்ச்சி நிறைவை நாடியது.

